சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ விசாரிக்கவில்லை என நளினி சிதம்பரம் மறுப்பு
சென்னை: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குத் தொடர்பாக தன்னிடம் விசாரணை நடைபெற்றதாக ஊடகங்களில் வெளியான தகவலை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மறுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை கலக்கிய சாரதா சிட் பண்ட் மோசடியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மற்றும் சாரதா நிறுவன அதிபர் சுதிப்தா சென் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சி.பி.ஐ.க்கு சாரதா நிறுவன அதிபர் சுதிப்தா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள 18 பக்க விளக்கத்தில், ஒவ்வொரு முறை கொல்கத்தா வந்த போதும், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு கட்டணம் வழங்கியதாகவும், அவர் தங்குவதற்கான ஐந்து நட்சத்திர ஓட்டல் செலவையும் தானே ஏற்றதாகவும் கூறியிருந்தார்.
மேலும், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சனா என்பவருக்குச் சொந்தமான ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் நளினி சிதம்பரம் சட்ட ஆலோசகராகப் பங்கு வகித்ததாகவும், அதற்காக அவருக்கு சட்ட ஆலோசனைக் கட்டணமாக ரூ.1 கோடி கொடுக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் சுகிப்த சென் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
அதனடிப்படையில், நேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை நளினி சிதம்பரம் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை ஏதும் நடத்தவில்லை. வழக்குரைஞர் என்ற அடிப்படையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் மனோரஞ்சனா என்னிடம் ஆலோசனை பெற்றாரா என சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, மனோரஞ்சனா என்னிடம் ஆலோசனை பெற்றார் என்று சிபிஐ அதிகாரிகளிடம் கூறினேன்', என விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications