தபால் வாக்குகளில்... தலைவர், து. தலைவர் பதவிகளில் சரத், சிம்பு, விஜயக்குமார் முன்னணி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடந்து வருகிறது. இதில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான முன்னணி நிலவரம் தெரிய வந்துள்ளது. அதில் சரத்குமார் அணி முன்னிலை பெற்றுள்ளது.
நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இதில் தபால் மூலமாக 783 வாக்குகளும், நேரடியாக 1824 வாக்குகளும் என மொத்தம் 2, 607 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தபால் வாக்குகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பதவிக்கும் பதிவான வாக்குகளைப் பிரிப்பதில் தாமதம் ஏற்படவே எண்ணும் பணியும் தாமதமானது.
எட்டரை மணிக்கு மேல்தான் தபால் வாக்கு நிலவரம் தெரிய வந்தது. பதிவான வாக்குகளில் பெரும்பாலான வாக்குகளை சரத்குமார் அணியைச் சேர்ந்த சிம்பு, விஜயக்குமார் ஆகியோர் பெற்று முன்னிலை வகித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல தலைவர் பதவிக்கான தபால் வாக்குகளிலும் சரத்குமார் முன்னிலை பெற்றுள்ளார். நாசர் பின் தங்கினார்.
தலைவர் பதவிக்கான தபால் வாக்குகளிலும் சரத்குமார் முன்னிலை பெற்றுள்ளார். நாசர் பின் தங்கினார்.
ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்
வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து வாக்குச் சாவடி வளாகத்தில் பெரிய திரை அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்து வந்தனர். ஆனால் திடீரென அதை தற்போது நிறுத்தி விட்டனர். இதற்கான காரணம் தெரியவில்லை.
ஆனால் இரு அணியினரும் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பகலில் நடந்த மோதல் போல இரவில் நடந்தால் அசம்பாவிதமாகி விடும் என்ற அச்சத்தால் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.