மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே: ஜெ. கண்டனம் தெரிவித்த பிறகு அறிக்கை விட்ட சரத்குமார்
சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்துள்ளதற்கு சமக தலைவர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக ராஜபக்சே மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் மீது சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும் என்றும், அதன்பின் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் 16-வது பிரதமராக மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கடைப்பிடித்த அதே கொள்கையை பா.ஜ.க.வும் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவே, தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்கும் விழாவிற்கு அழைக்கக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.