கட்சியை வளர்க்கும் பணி குறுக்கிட்டதால் இடையில் "பிரிவு" ஏற்பட்டு விட்டதாம்.. சொல்கிறார் சரத்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் 2 எம்.எல்.ஏ.க்களுடன் வலம் வந்தவர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். சரத்குமார் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். மற்றொரு எம்.எல்.ஏ.வான எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அதிமுக பக்கம் சென்றுவிட்டார்.
கட்சி உடைந்த நிலையில் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

கறிவேப்பிலை
அதிமுக தன்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது என்று குற்றம் சாட்டினார் சரத். தேர்தலில் அதிக இடங்கள் தருகிறோம் என்று கூறி அழைத்தாலும் இனி அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார் அவர்.

பாஜக கூட்டணி
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார் நேராக பாஜக கூட்டணிக்கு சென்று சேர்ந்துவிட்டார். பாஜகவோ தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க கெஞ்சிக் கூத்தாடியும் இது நடக்காமல் போக அதிமுகவுடன் சேர நினைக்கிறது.

போயஸ் கார்டன்
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கும் நிலையில் சரத்குமார் இன்று போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மீண்டும்
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். கட்சி வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இடையில் அதிமுகவுடன் பிரிவு ஏற்பட்டது. சமக செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுப்படி சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார்.

ஒரு மாதம்
சரத்குமார் கடந்த மாதம் 21ம் தேதி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். கூட்டணியில் இருந்து விலகிய ஒரு மாத்ததில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கே சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications