சசிகலா குடும்பம் இன்றோடு.. ஓரம் கட்டப்படுமா கூண்டோடு?
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், சசிகலா குடும்பம் இன்றோடு, அதிமுகவில் இருந்து கூண்டோடு ஓரம் கட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் இணையும் பட்சத்தில் இன்றோடு சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து கூண்டோடு முற்றிலுமாக ஓரம் கட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து, சசிகலா முதல்வர் பதவியை ஏற்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட நேரம் பார்த்து, சரியாக பிப்ரவரி 5ம் தேதி ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து சசிகலா குடும்பத்தினர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
துணைப் பொதுச் செயலாளர் தினகரன்
அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி சம்பவங்கள் தமிழக அரசியல் நடைபெற்றது. அதில் முக்கியமானது சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றதுதான். அதனைத் தொடர்ந்து தினகரன் துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
தினகரனுக்கு திகார் சிறை
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் திகார் சிறையில் தள்ளப்பட்டார். இதனால் இரு அணிகளும் இணையும் வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சசிகலா பேனர்கள் அகற்றம்
ஆனால், ஓபிஎஸ் அணியினர் சசிகலா குடும்பமே முற்றிலுமாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டால் இணைப்பு என்று தெரிவித்தனர். இதனால் அவசர அவசரமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டது.
முதல்வரின் அறிவிப்பு
இதனை ஓபிஎஸ் அணியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. முறைப்படியான நீக்கம் தேவை என்று ஓபிஎஸ் அணியினர் உறுதியாக நின்றனர். இதனைத் தொடர்ந்து 2 அணியினரும் இணைவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இல்லை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
சசிகலா குடும்பம் முற்றிலும் நீக்கம்
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணியினரின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், இன்று இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது அதிமுகவை சசிகலா குடும்பத்தில் இருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கும் நிகழ்வாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
அலுவலகம் செல்வதைத் தவிர்த்த தினகரன்
ஏற்கனவே, தினகரன் ஆகஸ்டு 5ம் தேதி, அவர் அளித்த கெடு முடிந்து தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக அறிவித்த நிலையில் அவரால் அங்குச் செல்ல முடியவில்லை. மீறிச் சென்றால் தினகரன் கைது செய்யப்படுவார் ஊகங்கள் வெளியான நிலையில் தினகரன் போவதைத் தவிர்த்தார்.
விரைவில் சசிகலா நீக்கம்
இப்படிப் படிப்படியாக சசிகலா பேனர் முதல் தினகரன் வரை அதிமுகவில் இருந்து எடப்பாடி அணிந்து வெளியேற்றியது. அதன் அடுத்த கட்டமாக, இந்த 2 அணிகளும் இணைந்த பின்னர் பொதுக் குழுக் கூடி சசிகலாவை பொதுக் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைதூக்குவது சிரமம்தான்
அப்படி, செய்யப்பட்டுவிட்டால், சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படும் என்பது உறுதி. அதன் பிறகு அவர்களால் அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவது என்பது சிரமம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.