மோடியை சந்திக்கிறார் சசிகலா புஷ்பா! ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை!!
டெல்லி: அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றும் சசிகலா நடராஜனின் முயற்சிகளை முறியடிக்கும் வியூகங்களுடன் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து திடீரென அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நடராஜன் முயற்சித்து வருகிறார். அதேபோல் அமைச்சர்களைத் தூண்டிவிட்டு சசிகலாதான் முதல்வராக வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பப்படுகிறது.
சசிகலா புஷ்பா எதிர்ப்பு
இந்த முயற்சிகளுக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
பிரணாப், ராஜ்நாத்துடன் சந்திப்பு
இதனிடையே டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை நேரில் சந்தித்தார் சசிகலா புஷ்பா. அப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மனுக்களைக் கொடுத்திருந்தார் சசிகலா புஷ்பா.
பிரதமர் அலுவலகம் அழைப்பு
இதேகோரிக்கையுடன் பிரதமர் மோடியை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தார் சசிகலா புஷ்பா. சென்னையில் இருந்த சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா இருந்தார்.
மோடியுடன் சந்திப்பு
இதையடுத்து தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. பிரதமர் மோடியிடம் சசிகலா நடராஜனின் வியூகங்கள், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து சசிகலா புஷ்பா விரிவாக விவரிக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.