சந்தேகத்தை எழுப்பும் சசிகலாவின் திடீர் ‘நீண்ட மவுன விரதம்’!
ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா சிறைக்குள் மவுன விரதம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா சிறைக்குள் மவுன விரதம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கு தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

ஆறுமுகசாமி கமிஷன்
இந்த விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடமும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது.

சசிகலாவுக்கு சம்மன்
இந்த நிலையில் விசாரணை கமிஷன் சார்பில் சசிகலாவுக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் மூலம்
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் மூலம் முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதே போல் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தாரெட்டி ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார்.

சசிகலா மவுன விரதம்
இந்நிலையில் சசிகலா பெங்களூரு சிறையில் மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவை இன்று சிறையில் சந்தித்த தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முந்திக்கொண்டு சொன்ன தினகரன்
அப்போது ஜெயலலிதா நினைவு நாள் முதல் சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருப்பதாகவும் இந்த மவுன விரதம் ஜனவரி மாதம் இறுதி வரை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக சசிகலா எதுவும் பேசவில்லை என்றும் தான் பேசியதைதான் அவர் கேட்டுக்கொண்டார் என்றும் டிடிவி தினகரன் முந்திக்கொண்டு தெரிவித்தார்.

சம்மன் - நீண்ட மவுனவிரதம்
ஆறுமுக சாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக தினகரன் தற்போது தெரிவித்துள்ளார். 15 நாட்களில் விளக்கமளிக்க கமிஷன் உத்தரவிட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் இறுதி வரை சசிகலாவின் மவுன விரதம் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சந்தேகத்தை எழுப்பும் விரதம்
அதன்படி பார்த்தால் கிட்டதட்ட 2 மாதங்கள் சசிகலா மவுன விரதம் மேற்கொள்ளவுள்ளார். விசாரணை கமிஷனுக்கு அஞ்சி சசிகலா இந்த நீண்ட மவுன விரதத்தை மேற்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications