சசிகலா பிடிவாதத்தால் "லாஸ்" ரூ.600 கோடி.. மிடாஸை நிறுத்திய தமிழக அரசு.. "லாபம்" யாருக்கு தெரியுமா?
மிடாஸ் மதுபானங்களை கொள்முதல் செய்வதை தமிழக அரசு குறைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் ஆலையில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதை தமிழக அரசு வெகுவாக குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மிடாஸ் ஆலைக்கு ரூ600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2002-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் மிடாஸ் மதுபான ஆலையை தொடங்கினர். 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசு மிடாஸில் கொள்முதலை தொடங்கியது.
2011-ம் ஆண்டில் மிடாஸின் ஆண்டு வருமானம் ரூ360 கோடியாக இருந்தது. தற்போதைய நிலையில் மிடாஸின் ஆண்டு வருமானம் ரூ1,200 கோடி என கூறப்படுகிறது.
திகாரில் தினகரன்
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் திகார் சிறைக்கு சென்றார். அதனையடுத்து அதிமுகவையும் ஆட்சியையும் முழுவதும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது மேற்கு மண்டலம்.
கழற்றிவிடப்பட்ட மிடாஸ்
அப்போது, முதல் அதிரடியாக மிடாஸின் கட்டுப்பாட்டில் இருந்த டாஸ்மாக் ஒட்டுமொத்த கொள்முதல் பணியை நிறுத்தியது அரசு. பின்னர் மிடாஸ் ஆலையில் இருந்து மதுபானங்களை கொள்வதையும் வெகுவாக குறைத்தது தமிழக அரசு.
60% இழப்பு
மிடாஸ் ஆலைக்கு தற்போது 60% இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றன சசிகலா குடும்ப வட்டாரங்கள். அதாவது ரூ600 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.
யாருக்கு லாபம் தெரியுமா?
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமான ஆலைகளில் இருந்து தாராளமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றனவாம். அவை எந்தக் கட்சி என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. மக்களுக்கே நல்லா தெரியும். தமிழக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் "மந்த" நிலைக்கு இதுவும் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.