சசிகலா குரல் எப்படி இருக்கும்?.. அறிந்து கொள்ள அதிமுக தொண்டர்கள் ஆர்வம்!
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை வாயே திறக்காத சசிகலா இனியாவது வாய் திறப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக வின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை எதற்குமே வாயே திறக்காத சசிகலா இனியாவது வாய் திறப்பாரா? அவரது குரலை கேட்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவரை பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இதுவரை மீடியாக்களை சந்தித்ததில்லை. ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட போதும் சரி, அவர் உயிரிழந்தப் பிறகும் சரி பல்வேறு சந்தேகங்கள் பல தரப்பில் இருந்தும் எழுந்தது. அப்போது கூட சசிகலா வாய்திறக்கவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சசிகலா விளக்கம் தர வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உட்பட பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதற்கும் அசராத சசிகலா இதுவரை எதற்கும் வாய் திறந்து பேசியதேயில்லை.
மேலும் அவரது குரல் எப்படியிருக்கும் என்று மக்களுக்கு தெரியவில்லை.தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து கூட அவர் செய்தியாளர்களிடமோ அல்லது அதிமுக தொலைக்காட்சியான ஜெயா டிவியிலோ கூட பேசியதில்லை.
ஜெயலலிதா முன்பு சசிகலாவை வீட்டில் இருந்து வெளியேற்றி மீண்டும் இணைத்துக் கொண்டபோதுகூட சசிகலா அறிக்கைதான் விடுத்தாரே தவிர மீடியாவை சந்தித்து பேசவில்லை. இதுவரை சசிகலா குரலை வெளியுலகம் கேட்டதேயில்லை.
இதனால் அவரது குரல் எப்படியிருக்கும் என்று அதிமுகவினருக்கோ அல்லது மக்களுக்கோ தெரியாது. இந்நிலையில் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
இனி கட்சி நடவடிக்கைகள் குறித்து பேச வேண்டிய நிலையில் அவர் உள்ளார். இனிமேலும் அவர் வாய் திறக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆளுமை, மொழிவளம், குரல் வளம் இந்த நாடே அறிந்தது. இந்நிலையில் அவரது அரசியல் வாரிசு என அதிமுக தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, ஜெயலலிதா அளவுக்கு இல்லாவிட்டாலும் அவரில் பாதியாவது இருப்பாரா? அவரது குரல், மொழி வளம் எப்படியிருக்கும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாகியுள்ளனர்.
இனியாவது சசிகலா செய்தியாளர்களை சந்திப்பாரா, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா, வெளியுலகில் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications