தூத்துக்குடி வந்த பனாமா கப்பலில் சேட்டிலைட் போன் - அதிகாரிகள் தீவிர விசாரணை
தூத்துக்குடி: பாகிஸ்தானில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் தடை செய்யப்பட்ட நவீன சேட்டிலைட் போன் பிடிப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குடப்பட்ட தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அரசால் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பயன்படுத்தப்படுவதாக இந்திய சாட்டிலைட் கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து உளவுத்துறையினர், கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீசார், மரைன் போலீசார் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்றனர். அங்கு நின்ற பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எம்.வி நோர்கா என்ற கப்பலில் சோதனையிட்டனர்.
இந்த கப்பல் பாகிஸ்தான் துறைமுகமான கராச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தது. தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பயன்படுத்தபடும் முக்கிய எரிபொருளான நப்தா இதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கப்பலில் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இதில் அங்கு ஒரு சாட்டிலைட் போன் இருப்பது தெரிய வந்துள்ளது.
சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் போன்களை போன்று ரீசிவர் மற்றும் கன்சோலுடன் கூடிய அந்த சாட்டிலைட் போனை சுங்கதுறையினர் பறிமுதல் செய்தனர். அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த போன்களால் உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த நபர்களுடனும தொடர்பு கொள்ளலாம். இதன் எண் எந்த போனிலும் பதிவாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சட்ட விரோத செயல்களுக்கும், தீவிரவாதிகளும் பயன்படுத்த கூடும் என்பதால் இந்தியா இதை முற்றிலும் தடை செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த வகை போனை வைத்து யாருடன் பேசலாம். சாதாரண போனை போன்று இதனை கண்டுபிடிக்க முடியாது. துறைமுகத்தில் இந்த போனை உபயோகித்து கப்பல் ஊழியர் பேச முயன்றுள்ளார். அப்போதுதான் இது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தனர்.
இது தொடர்பாக சாட்டிலை போனை வைத்திருந்த கப்பல் கேப்டன் குரோஷியா நாட்டை சேர்ந்த சுர்ஷத் மாஸ்க் மற்றும் அதில் பணியாற்றும் 22 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.