10ம் வகுப்பு தேர்வு.. மாநில அளவில் 2வது இடத்தைப் பிடித்த பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மகள்!
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவி கனிமொழி 498 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளார்.
அவரது தந்தை அப்பள்ளியிலேயே வாகன ஓட்டுநராக உள்ளார். மாணவி கனிமொழியின் தந்தை பெயர் கணேசன்.
மகள் படிக்கும் ஏ.கே.டி. பள்ளியிலேயே பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். தாயார் பெயர் செல்வி. குடும்ப தலைவி.
பெற்றோரும், ஆசிரியர்களும்:
தன்னுடைய வெற்றி குறித்து கனிமொழி, "நான் இந்த அளவுக்கு மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்திருப்பதற்கு எனது பெற்றோரும் ஆசிரியர்களுமே காரணம்.
காலை 5 மணி முதல் படிப்பு:
நான் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்பேன். என்னை சரியான நேரத்துக்கு எனது பெற்றோர் எழுப்பி விட்டுவிடுவார்கள்.
படிப்பதற்கு ஊக்கம்:
நன்றாக படிக்க வேண்டும் என அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.
சாதனைக்கு காரணம்:
அதேபோல் பள்ளியிலும் ஆசிரியர்கள் மிகவும் உற்சாகப்படுத்தி உதவிகளை செய்தனர். தினமும் மாலை 7 மணி வரை பள்ளியிலேயே தங்க வைத்து படிக்க வைத்தனர். இதனால்தான் இந்த சாதனையை செய்துள்ளேன்.
ஏழை மக்களுக்கு சேவை:
நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவள். கஷ்டப்பட்டு படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது எனது லட்சியம். அதன்பிறகு டாக்டருக்கு படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.