குற்றால சீசன் தாமதம்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்... புலம்பும் வியாபாரிகள்
குற்றாலம்: அருவி நகரம் என்றழைக்கப்படும் குற்றாலத்தில் இன்னும் சீசனுக்கான அறிகுறியே தென்படவில்லை. வெறும் பாறை தாங்க இருக்கு தண்ணீ வரலையே என்பது குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் புலம்பலாக உள்ளது. கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகளோ சீசன் விரைவில் தொடங்க வருணபகவானை வேண்டிக்கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்குள்ள பேரருவி, தேனருவி, செண்பகா தேவி அருவி, புலி அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி ஆகிய வற்றில் ஆனந்தமாக கூட்டம் குவியும். கடந்த ஆண்டு ஜூன் முதல்தேதியே சீஸன் பிரமாதமாக தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதத்தால் இன்னமும் குற்றாலத்தில் சீஸனுக்குரிய அறிகுறியே தெரிய வில்லை. இதனால் அங்கு கடையை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
ஏற்பாடுகள் தயார்
இந்த ஆண்டுக்கான சீஸனுக்காக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்திருக்கின்றன. குற்றாலத்தில் அருவிப் பகுதிகள், சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
வியாபாரம் எப்படியோ?
குற்றாலம் பகுதியில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே வியாபாரம் இருக்கும் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான சன்னதி பஜார், வடக்கு சன்னதி, ரத விதிகள் போன்ற பகுதிகளில் 120 நாட்களுக்கு ஏலம் விடப்படுகிறது. ஆனாலும் மொத்தம் 75 நாட்கள் மட்டுமே அதிக அளவில் வியாபாரம் நடைபெறும். சீசனை நம்பி குற்றாலம் சன்னதி பஜாரில் 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் ஒரு கடையை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளனர். சீசன் துவங்காமல் உள்ளதால் ஏலம் எடுத்த வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
வாகன நிறுத்த கட்டணம்
குற்றாலம் ரத வீதி பகுதிகளில் வாகன நிறுத்தம் பகுதியை ஏலம் விடுவது வழக்கம். இந்தாண்டு அந்த பகுதியை ரூ.39 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளனர். ஆனால் இந்தாண்டு சீசன் தாமதம் அதிக வசூல் செய்வதில் போலீசாரின் கண்டிப்பு போன்ற காரணங்களால் இந்தாண்டு ஏலத்தை ரூ.20 லட்சத்திற்கு மேல் யாரும் கேட்கவில்லை. இதனால் ஏலம் நடைபெறுவது ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
காற்று வாங்கும் வியாபாரிகள்
பேரூராட்சி சார்பில் விடப்படும் கார் பார்க்கிங் ஏலமும் இன்னமும் விடப்படவில்லை. தற்காலிக கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தவர்கள் கடையை திறந்து வைத்து விட்டு காற்று வாங்கி கொண்டிருக்கின்றனர். மழை தொடங்கி அருவியில் தண்ணீர் வர வருண பகவானை வேண்டிக்கொண்டுள்ளனர் வியாபாரிகள்.
படங்கள்: சசி