விடுமுறை தினம் எதிரோலி... குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நெல்லை: குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் போக்கு காட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் தவிப்பிற்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் தென்மெற்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் சீசன் களை கட்டுகிறது.
சீசன் தொடங்கியது...
சீசன் தொடங்கிய ஒரிரூ நாளிலேயே அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழ தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக அவ்வப்போது மழையும், மெல்லிய வெயிலும், காற்றும் அடித்து வருகிறது.
அருவிகள்...
மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் நன்றாக தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளையிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.
மக்கள் வெள்ளம்...
ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருந்தது.
பாதுகாப்பு பணி...
இதனால் குற்றாலத்தில் தண்ணீரை விட மக்கள் வெள்ளம் அதிகமாக இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போலீசாருடன் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் நண்பர்கள் குழு...
பஸ் நிலையம், அருவி பகுதி, பூங்காக்கள், வாகனம் நிறுத்திமிடம் ஆகிய இடங்களில் இந்த மாணவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் மஞ்சள் டிசார்ட் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்...
சுற்றுலா பயணிகள் வசதிக்காக தென்காசி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பயணிகள் குற்றாலத்திற்கு செல்வதற்க்கு வசதியாக ரயில் வரும் நேரத்தில் இரண்டு சிறப்பு பஸ் குற்றாலத்திற்கு இயக்கப்படுகிறது.