பணப்பட்டுவாடா, வன்முறையைத் தடுக்கவே 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் விளக்கம்
சென்னை: பணம் பட்டுவாடா மற்றும் வன்முறையை தடுப்பதற்காகவே இம்முறைத் தேர்தலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கமளித்துள்ளார்.
நாளை தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 லோக்சபா லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக நேற்று முதல் நாளை வரை மொத்தம் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் படுத்த இருப்பதாக நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், அதனை செயல் படுத்தவும் செய்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு எதிரானது என கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளார்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் தமிழகத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப் பட்டதற்காக காரணத்தை விளக்கினார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த...
144 தடை உத்தரவால் பணப்புழக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. நாளை காலை முதல் 6 மணிக்கு 144 தடை உத்தரவு விலக்கப்படுவதால் வாக்காளர்கள் தயக்கமின்றி வாக்களிக்கலாம்.
மாதிரி வாக்குப்பதிவு...
நாளை காலை 6 மணிக்கு வாக்குசாவடிகளில் மாதிரி வாக்குபதிவு நடக்கும். வாக்கு எந்திரங்களை பரிசோதிக்க கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெறும்.
ஒப்புகை சீட்டு முறை...
மத்திய சென்னை தொகுதியின் 1153 மையங்களில் ஒப்புகைசீட்டு முறை அறிமுகம் செய்யபட்டுள்ளது.
கடும் நடவடிக்கை...
வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுகப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.