Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைரமுத்துக்கு வாய் திறக்கலை.. விஜயேந்திரருக்கு வக்காலத்தா? கமலை கிழித்துத் தொங்க விட்ட சீமான்

கவிஞர் வைரமுத்துவிற்காக வாய்திறக்காத நடிகர் கமல்ஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா? என சீமான் விளாசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயேந்திரருக்கு கமல் சுளீர்!- வீடியோ

    சென்னை: கவிஞர் வைரமுத்துவிற்காக வாய்திறக்காத நடிகர் கமல்ஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.

    சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார் காஞ்சி விஜயேந்திரர். அப்போது இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்றார். விஜயேந்திரருக்கு ஆதரவான கமல்ஹாசனின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    கமல்ஹாசனுக்கு கண்டனம்

    கமல்ஹாசனுக்கு கண்டனம்

    பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடத்தியப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி மடத்தைச் சேர்ந்த பீடாதிபதி விஜயேந்திரர் அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்காது அவமதித்தற்குத் தமிழகமே கொந்தளித்துக்கிடக்கிற சூழலில் விஜயேந்திரருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ள மதிப்பிற்குரிய சகோதரர் கமலஹாசனின் செயலானது அதிர்ச்சியினை அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது என்பது தமிழன்னையைப் போற்றித் தொழுகிற ஓர் மரபு; அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதென்பது ஒரு அடிப்படை மாண்பு. இதனை விஜயேந்திரர் செய்யத்தவறியதை இன உணர்வுள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. இத்தகைய நிலையில் தமிழுக்கு நேர்ந்த அவமரியாதையைக் கண்டிக்க மறுத்து அச்செயலுக்கு ஆதரவாய் கருத்து வெளியிட்டிருக்கும் கமலஹாசனுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

    கண்ட இடத்தில்தானே தேசியகீதம்

    கண்ட இடத்தில்தானே தேசியகீதம்

    கண்ட இடத்திலெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள கமலஹாசன் எதனைக் கண்டவிடமெனக் குறிப்பிடுகிறார்? எத்தனை கண்ட இடங்களில் தேவையற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டிருக்கிறது? கமலஹாசனிடம் பட்டியல் ஏதும் இருக்கிறதா? ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் உள்ளிட்ட பலதரப்பட்ட பெருமக்கள் வீற்றிருக்கிற ஒரு அவையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதில் என்ன பிழை? அதே கண்ட இடத்தில்தானே தேசியகீதம் பாடப்பட்டது. அதனை வேண்டாமென்று கமலஹாசன் கூறவில்லையே?

    தியானம் அவரது கடமை

    தியானம் அவரது கடமை

    ‘எழுந்து நிற்க வேண்டியது எனது கடமை; தியானம் செய்ய வேண்டியது அவரது கடமை' என்கிற கருத்தின் மூலம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த தேவையில்லை என்கிறாரா கமலஹாசன்? கண்ட இடத்தில் தமிழைத் தொழக்கூடாது என்பவர் கண்ட இடத்தில் தியானம் செய்யக்கூடாது என விஜயேந்திரருக்கு அறிவுறுத்த மறுப்பதேன்? மனதை ஒரு நிலைப்படுத்தித் தியானம் செய்ய முடிகிற இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படக்கூடாதா? தேசிய கீதத்தை இசைக்கிறபோது வராத தியான மனநிலை தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும்போது மட்டும் வந்ததெப்படி என எழும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்காது கமலஹாசன் தப்பக்கூடாது.

    மக்கள் மீது பழி போடுகிறார்

    மக்கள் மீது பழி போடுகிறார்

    மேலும், ஊழல் நடக்கும்போது மக்கள் தியானத்தில்தானே இருந்தார்கள் எனக் கூறி விஜயேந்திரர் எழுந்து நிற்காத செயலுக்கு நியாயம் கற்பிக்க மக்கள் மீது பழியைப் போடுகிறார் கமலஹாசன். ஊழல் நடக்கும்போது கமலஹாசன் வேண்டுமானால் தியானத்தில் இருந்திருக்கலாம். தற்போது ஞானோதயம் பெற்று ஊழலுக்கு எதிராக உற்சவம் நடத்தவும் முற்படலாம். ஆனால், எங்களைப் போன்றோருடன் இணைந்து மக்கள் எப்போதும் போராடிக் கொண்டுதானிருந்தார்கள். தங்களளவில் முடிந்த எதிர்ப்புதனை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்தார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    உத்தமராகக் காட்டிக்கொள்ள

    உத்தமராகக் காட்டிக்கொள்ள

    கமல்ஹாசனுக்கு உற்ற நண்பராக இருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து மீது வசைமொழிகள் பொழிந்தபோதும், அவரின் தாயை இழிவாகப் பழித்துரைத்தபோதும் வாய்திறக்காது மௌனமாய் தியான மனநிலையில் இருந்த கமலஹாசன் விஜயேந்திரர் விவகாரத்தில் வாய்திறந்து அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதன் அரசியல் என்ன என்பதனை விளக்க வேண்டும். விஜயேந்திரர் தமிழன்னையை அவமதித்ததைவிட அவர்க்கு ஆதரவாய் கமலஹாசன் கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் அவமரியாதையை ஏற்படுத்துகிறது. எனவே, அக்கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், தன்னை உத்தமராகக் காட்டிக்கொள்ள மக்கள் மீது பழியைப் போடும் போக்கை கைவிட வேண்டும் என்றும் கமலஹாசனுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+