கமல்ஹாசனை நான் ஏன் சந்தித்தேன்?- சீமான் விளக்கம்
Recommended Video
சென்னை: கமல்ஹாசனை ஏன் நான் சந்தித்தேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நடிகர் கமல்ஹாசனை சீமான் இன்று சந்தித்தார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் மிக மோசமான சூழ்நிலைக்கு ஆட்சி போய்க்கொண்டுள்ளது. எப்படியாவது ஒரு மாற்றம் ஏற்பட்டுவிடாதா என்று நினைத்து எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இந்த மண்ணின் மக்களால் நேசிக்கப்படும் அண்ணன், கமல்ஹாசனும் 21ம் தேதி கட்சி துவங்குவதாக அறிவித்தார்.
வாழ்த்து
நான் நேசித்து வளர்ந்த ஒரு கலைஞர் என்பதால் அவர் என்னை வந்து பார்ப்பது சரியாக இருக்காது என்பதால் நாங்கள் தேடி வந்தோம். அவர் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பது வாழ்த்து. ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம், என்றார்.
ரஜினிக்கு ஏன் எதிர்ப்பு
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களே, கமலை வாழ்த்துகிறீர்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு இது எங்கள் மண். பொள்ளாச்சி என்பதை புத்தகத்தில் படித்து பிரயோஜனம் இல்லை. போய் பார்க்கனும். இங்கே நெசவாளர் பிரச்சினை என்ன, பேருந்து ஓட்டுநர் பிரச்சினை என்ன எல்லாம் தெரியும்போதுதான் அதை சரி செய்ய முடியும். அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், நீங்கள் இருங்க, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறோம்.
ஊழல் ஆரம்பிப்பது ஓட்டுபோடும்போது
ஊழல் மட்டுமே பிரச்சினை கிடையாது. பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் நிலை இருக்கும்வரை ஊழல் இருக்கத்தான் செய்யும். ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அதை வாங்கி ஓட்டுப்போடுபவன் தேசத் துரோகி என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியுள்ளார். ஊழல் ஒழிய வேண்டும் என்று ஒவ்வொருவரும் உளமாற நினைக்க வேண்டும்.
எதிலும் அரசியல்
அரசியல் என்பது யாரோ ஒருவர் செய்வது என்று நினைக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் உள்ளது. ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அதை தீர்மானிப்பது அரசியல். அந்த அரசியலைவிட்டு விலகி நின்று என்ன செய்ய முடியும்? அரசியலில் மாற்றம் கொண்டுவர கமல் கட்சி தொடங்குகிறார். கமல் என்னை பார்க்க வருவதாக கூறினார். பண்பாட்டு ரீதியாக, கமல் என்னை பார்க்க வருவது சரியாக இருக்காது என்பதால் நானே சந்திக்க வந்தேன்.
எங்கள் மண்
இது எங்கள் மண், இங்கே எங்கே என்ன பிரச்சினை உள்ளது என்பது எங்களுக்குத்தான் தெரியும். நான் இப்போது வாழ்த்து தெரிவிக்க வந்துள்ளேன். கூட்டணி குறித்தெல்லாம் காலம்தான் முடிவு செய்யும். நீங்கள் ஆசைப்பட்டால் கூட்டணியும் வைப்போம். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.