இது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.... சீமான்
தஞ்சாவூர்: தற்போதைய சட்டசபைத் தேர்தல் என்பது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளார்.
சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர். அங்கு பெரியகோவிலில் சிவன் வழிபாடு நடத்தி தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார் சீமான்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். சீமான் பேச்சிலிருந்து...
திமுக, அதிமுக வரக் கூடாது
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது. நாங்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.
திமுகவின் பலவீனம்
திமுகவுடன் கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்காக அவர்கள் எதிர்பார்த்தது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது. அதுதான் எதார்த்த உண்மை.
தனித்துப் போட்டியிடலாம்
மு.க.ஸ்டாலின் நடைபயணத்தால் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது, மக்கள் அவர்களை விரும்புகிறார்கள் என்று நினைத்தால் திமுக தனித்து போட்டியிடலாம். ஆனால், தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு தயக்கம். அதனால்தான், அவர்கள் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள்.
தத்துவம் சாகுதோ, கொள்கை சாகுதோ
தத்துவம் சாகுதோ, கொள்கை சாகுதோ அன்றுதான் பணத்தை நம்புபவர்கள் கூட்டணி அமைத்தாவது ஜெயித்துவிடமாட்டோமா என்று நினைப்பார்கள். எங்களுக்கு தத்துவம், கொள்கை இருக்கிறது. அதனால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.
ஜெயலலிதா பயப்படுகிறார்
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் அவரும் தனித்து போட்டியிடுவதற்கு பயப்படுகிறார். மக்களோடு சேர்ந்து தனியாக நின்று போட்டியிடுகிறோம். கொள்கை, நோக்கத்தின் அடிப்படையில் இணைந்து செயல்படுவது போய்விட்டது.
காங்கிரஸ், திமுகவை ஒழிக்க வேண்டும்
எப்பவுமோ நான் யாருக்குமே ஆதரவாக நின்றதில்லை, எதிராகத்தான் நின்றிருக்கிறேன். அதில் என் இனத்தை கருவறுத்து, கரிக்கட்டைகளாக ஆக்கிப்போட்ட காங்கிரஸ், திமுகவையும் ஒழிக்க வேண்டுமென நினைத்தேன். அப்படி நான் போட்டியிடும்போது, எனது கட்சிக்காரர்கள் போட்டியிடும்போது அது தேமுதிகவிற்கு, இடதுசாரிகளுக்கு, அதிமுகவிற்கு ஆதரவாக மாறிப்போனதே தவிர, நான் யாருக்கும் ஆதரவாக நின்றதில்லை.
அன்புமணி வருவதில் என்ன தப்பு
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவோ, முதலமைச்சராகவோ வரும்போது, அன்புமணி ராமதாஸ் வருவதில் என்ன தப்பு இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் வரட்டும், நான் வருவேன் என்று நம்புகிறேன். யார் நல்ல ஆட்சி தருகிறார்கள் என்று பார்ப்போம்.
விதை விழுந்து விட்டது
மக்களுக்குள் நீணடகாலமாக மாற்றத்திற்கான விதை விழுந்து விட்டது. தனித்து நின்று தோற்றுப்போனாலும் மீண்டும், மீண்டும் நிற்பார்கள். நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற நம்பிக்கையை தராமல் போனதுதான் திராவிட கட்சிகளுக்கு பலமாக போய்விட்டது. அப்படியிருந்தால் என்றோ திராவிட கட்சிகளை தூக்கி எறிந்திருக்கலாம்.
திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும்
ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த கட்சிகளை ஒழிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கின்றோம். தனித்து நிற்கும் நம்பிக்கையை நாங்கள் தரப்போகிறோம். நிச்சயம் மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறோம்.
எல்லாம் நாசமாப் போச்சு
இலக்கியம், பண்பாடு, ஏரி, குளங்கள், ஆறுகள், வேளாண்மை போன்றவற்றை நாசம் பண்ணியிருக்கிறார்கள். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். அதனால்தான் நாங்கள் இந்த தேர்தலை போர் என்கின்றோம். இது தமிழர்களுககும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.
அப்புறப்படுத்த வேண்டும்
பன்னெடுங்காலமாக தமிழர் அரசியலை, அதிகாரத்தை கெடுத்து நாசமாக்கிய திராவிட ஆட்சி முறையை அப்புறப்படுத்திடும் போர் இது.
தற்கொலை தொடரத்தான் செய்யும்
தமிழகத்தை கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆட்சி செய்யும் வரை விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தமிழகத்தில் 2000 டி.எம்.சி தண்ணீரை வீணாக கடலில் கலக்க விட்டுவிட்டு, 400 டி.எம்.சி தண்ணீருக்காக கர்நாடகாவிடம் தமிழக அரசு கையேந்துகிறது என்றார் சீமான்.
ராஜராஜ சோழனின் பாதத்தில்
முன்னதாக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை ராஜராஜ சோழனின் சிலையின் பாதத்தில் வைத்து சீமான் ஆசி பெற்றார்.