தேவர் குருபூஜைக்கு 144 தடை விதிக்கக் கூடாது - சீமான்
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு 144 தடை விதிக்கக் கூடாது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தனது வாழ்நாளில் கால் பங்கு நாட்களை சிறையில் கழித்த மாபெரும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூசை ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் 30-ந் தேதி நடைபெறவுள்ளது. ஜெயந்தி நிகழ்விற்கு வரக்கூடிய மக்களை ஒவ்வொரு ஆண்டும் முறையாக ஒழுங்குபடுத்தி வந்த காவல் துறை, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்றைய ஆட்சியாளர்களும், இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களும், கட்சித் தலைவர்களும் தவறாமல் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் அவர் மீது பேரன்பும், மரியாதையும் கொண்டுள்ள தென்னாட்டு மக்களை ஏதாவது ஒரு வகையில் அவமானப்படுத்துகின்றனர். இதனை எவ்வாறு சகித்துக் கொள்வது?
எனவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக தலையிட்டு, பசும்பொன்னில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெறுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.