இட்லி காரம்மா உங்க ஓட்டு எனக்குத்தானே... ஸ்டாலினின் கடைசி நிமிட ஒட்டு வேட்டை
சென்னை: இட்லி காரம்மா... பூக்கார அக்கா... உங்க எல்லோருடைய ஓட்டும் எனக்குத்தானே என்று அனைவரினை கைகளைப் பிடித்து கொளத்தூர் தொகுதியில் ஆதரவு கேட்டார் மு.க. ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் பிரச்சாரம் ஓய்வதை அடுத்து ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்னான நேரமாக கருதிய ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார்.
பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகில் இருந்து வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திருவள்ளுவர் மெயின் ரோடு, பீர்சாப் சந்து உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
செல்பி வித் ஸ்டாலின்
அப்போது பெண்கள், மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள் ஆர்வத்துடன் மு.க.ஸ்டாலினுடன் கை குலுக்கினார்கள். ஒரு சிலர் அவரிடம் ‘ஆட்டோ கிராப்' வாங்கினார்கள். சிறுவர்கள் அவரிடம் ‘செல்பி' ஆர்வத்துடன் எடுத்து கொண்டனர்.
வாக்கிங் வித் ஸ்டாலின்
தொண்டர்கள் புடைசூழ மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று கருணாநிதியின் ஆட்சி மலர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அனைவரின் கைகளைப் பிடித்தும் அவர் வாக்கு சேகரித்தார்.
ஜீப்பில் குழந்தை
திறந்த ஜீப்பில் பாஸ்கரன் தெரு, பேப்பர் மில்ஸ் ரோடு, பந்தர்கார்டன், மாதவரம் நெடுஞ்சாலை, பி.எம்.ரோடு, திரு.வி.க. நகர் மார்க்கெட், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை விட கொளத்தூர் தொகுதியில் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். எனக்கு மட்டுமல்ல, இந்த தொகுதிக்கே பெருமை என்றார்.
உங்கள் வீட்டு பிள்ளை
கஷ்டங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் நான் உங்களோடு இருந்தவன். உங்கள் வீட்டு பிள்ளை.... கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன். வளமான ஆட்சி கலைஞர் தலைமையில் அமைய உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அம்பத்தூரில் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடித்து கொண்டு அம்பத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். கொளத்தூர் தொகுதியில் வழி நெடுக மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னோக்கி சென்ற தமிழகம்
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சென்னை, வளர்ச்சிப் பாதையில் செல்லும். ஆனால், கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது.
நீரில் மூழ்கிய சென்னை
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழையின்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. இதனால், வெள்ளத்தின்போது சென்னை நகரே நீரில் மூழ்கியது.
மக்களை சந்திக்காத முதல்வர்
அந்த சமயத்தில் பல்வேறு கட்சியினர், தன்னார்வத் தொண்டர்கள், இளைஞர்கள் என பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவிகள் செய்தனர். அந்த நேரத்தில்கூட முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களைச் சந்திக்க வரவில்லை.
கிடப்பில் போடப்பட்ட் திட்டம்
திமுக ஆட்சியின்போது ரூ. 1,800 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு நிறைவு செய்யப்படும்.
பேரிடர் மேலாண்மை
சென்னையில் பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க லண்டன் மாநகரில் உள்ளது போன்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதாவை மக்களை மறந்து விடுவார். திமுக ஆட்சிக்கு வந்தால் வெள்ள நிவாரண கிடைக்காதவர்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.