மேட்டூர் அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை- செம்மலை எம்எல்ஏ புகார்
சொந்த தொகுதியான மேட்டூரில் உள்ள அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு தான் செல்லாதது குறித்து அத்தொகுதி எம்எல்ஏ செம்மலை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மேட்டூரில் உள்ள அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு தான் செல்லாதது குறித்து அத்தொகுதி எம்எல்ஏ செம்மலை விளக்கம் அளித்துள்ளார்.
நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தொப்பையாறு, பாலாறு ஆகியவற்றில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூருக்கு தண்ணீர் வரத்து 4,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையானது கடந்த 1934-ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது.
இந்த அணையில் தூர்வாரும் பணியை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார். அதில் தொகுதி எம்எல்ஏ-வான செம்மலை கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மேட்டூரில் செம்மலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், மேட்டூர் அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை.
என் தொகுதிதான் என்று மீறி சென்றாலும் அவமானம் ஏற்படும் சூழல் நிலவும். அணையை தூர்வாருவது நல்லதுதான். ஆனால் நோக்கம் நல்லதா என்று பார்க்க வேண்டும். சேலத்தில் உள்ள பணமரத்துக்குப்பட்டியில் ஏரி தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெறுகிறது.
நீர் நிலைகளில் வண்டல் மண் 1 மீட்டர்தான் இருக்கும். மீதமுள்ள செம்மண்ணும், சத்தான மண்ணும் தான். தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் அந்த பணியை கண்காணிப்பது யார்? விவசாயிகள் வண்டல் மண்ணை மட்டும் அள்ளி செல்வர்.
அதன் பிறகு உள்ள செம்மண்ணையும், சத்தான மண்ணையும் மணல் கொள்ளையர்கள் எடுத்துச் செல்வர். இந்த முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டுமானால் வண்டல் மண் அள்ளி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.