மதுக்கடைகளுக்கு எதிராக புது இயக்கம்... விரைவில் துவக்குகிறார் ராமதாஸ்: அன்புமணி அறிவிப்பு
சென்னை: மதுக்கடைகளுக்கு எதிரான புது இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் துவங்க உள்ளதாக தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அன்புமணி ராமதாஸ். அதனைத் தொடர்ந்து தற்போது தனனி வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று செட்டிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் கலந்து கொண்டார் அன்புமணி. அப்போது அவர் கூறியதாவது :-
பாமக சார்பில் விரைவில் மதுக்கடைகளை எதிர்த்து போராடும் இயக்கம் ஒன்று துவங்கப்பட உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராடும் நோக்கத்துடன் இந்த புது இயக்கத்தை விரைவில் துவங்க உள்ளார்.
மதுக்கடைகள் அழிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் பங்குபெறவும், அதன் செயல்பாடுகளில் கலந்துகொண்டு போராடவும் முன்வர வேண்டும். இதுபோன்ற ஒற்றுமையான செயல்பாட்டின் மூலம் தான் குடும்ப பொருளாதாரத்தை சீரழிக்கும் மதுவை அழிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.