மோடி அலை இருந்தால் ரஜினி, விஜய் எதற்கு?: சசிதரூர்
சென்னை: தமிழகத்தில் மோடி அலை இருந்தால் ஏன் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள் எல்லாம் அவர் பக்கம் இருக்க நினைக்கிறார்கள் என வினா எழுப்பியுள்ளார் மத்திய இணையமைச்சர் சசிதரூர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சசிதரூர், தென்சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமணியை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று சென்னை வந்திருந்தார்.
பிரச்சாரத்திற்கு முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளார்களைச் சந்தித்தார் சசிதரூர். அப்போது மோடியை தமிழக திரை உலகத்தினர் சந்திப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,
சிற்றலை கூட இல்லை..
தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நரேந்திர மோடி அலை ஒன்றும் இல்லை. சிற்றலை கூட இல்லை.
ஏன் மோடி பக்கம்...
அப்படி அவருக்கு அலை இருந்தால் ஏன் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள் பக்கம் அவர் போகிறார் என்றார்.
அப்போ ராகுல் சிறுவன்...
சீக்கியர்கள் கலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘காங்கிரஸ் ஆட்சியில் சீக்கியர்கள் கலவரம் நடந்தபோது ராகுல்காந்திக்கு 12 வயதுதான். அதனால், இந்த சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.
குஜராத் கலவரம்...
அதே நேரத்தில், குஜராத் கலவரம் நடந்தபோது, அம்மாநில முதல்வராக நரேந்திரமோடி தான் இருந்தார். எனவே, அவர் அந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.