தமிழகத்தில் ஒரு ஆற்றையே காணோம்.. கமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஆற்றையே காணாமல் செய்துவிட்டனர், சென்னை ஏரிகளின் கொள்ளளவு குறித்த தகவலை ஆர்டிஐ சட்டத்தில் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர் என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இதன்பிறகு கமல்ஹாசன் பேசியதாவது:
ஆற்றை காணோம்
தமிழகத்தில் இருக்கும் நிலங்கள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டுள்ளது. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. ஒரு சில நாட்களில் அந்த விவரத்தை வெளியிடுகிறோம். அதற்கு எங்கள் நண்பர்கள் எல்லோரும் வேலை செய்துகொண்டுள்ளனர். ஆற்றையே காணாமல் செய்துவிட்டனர் அரசு அதிகாரிகள். முன்பு கிணறை காணோம் என்றனர், இப்போது ஆற்றையே காணோம் என்கிறார்கள்.
சென்னை ஏரி
சென்னையிலுள்ள, குளங்களின் கொள்ளளவு என்ன என்று சாதாரண மனிதனாக ஒரு கேள்வியை கேட்டேன். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூட
அதற்கான விடை இல்லை. அந்த தகவல் இல்லை என்கிறார்கள். வெள்ளைக்காரனாவது எழுதி வைத்திருப்பானே என பார்த்தால், எழுதி வைத்தது எல்லாம் மாறிவிட்டது. நீர் வரத்தும் போக்கும் எங்கே உள்ளது என்று தெரியாத வண்ணம் வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக ரியல் எஸ்டேட் ஆக்கனும். அங்கே வீடு கட்டணும். வீடெல்லாம் கட்டிக்கொண்டே இருந்தால் சோத்துக்கு என்ன செய்வது, பீட்சா, பர்கர் சாப்பிட்டுக்கொண்டே இருக்க முடியுமா?
தங்கம் இருந்தாலும் வேண்டாம்
பக்கத்து மாநிலங்கள் கூட நாம அவர்களுக்கு சோறு போடுவோம் என நம்பிக்கொண்டுள்ளனர். விவசாயம் என்பது பழந்தொழில். நல்லது கெட்டது எல்லாவற்றிலும், இருக்கும். இது ஏழாயிரம், எட்டாயிரம் வருடம் பழமையான தொழில். அது இன்னும் தேவைப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி, ஹரிபரந்தாமன் ஒருமுறை சொன்னார், "ஹைட்ரோகார்பன் எடுப்பதாக கேள்விப்பட்டேன். அங்கே ஹைட்ரோகார்பனுக்கு பதிலாக, வைரமும், தங்கமும் இருந்தால் கூட எடுக்க முற்படாதீர்கள், மேலே நடக்கும் விவசாயம் நடக்க வேண்டும்" என்று அவர் கூறினார். அது எனது மனதில் பதிந்துவிட்டது. வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள் என்ன நடக்கிறது என்று?, ஹைட்ரோகார்பனை திங்க முடியாது. அது உயிரில்லா கருவிக்கு நுழைக்கும் விஷயம்தானே தவிர, மனிதனுக்கும், சூழலுக்கும் பயன்பாடது.
பின்னடைவு
விஞ்ஞானம் என்ற பெயரிலான விளையாட்டுகள், நமது நாட்டை பாதிக்கிறது. எது முன்னேற்றம் என்று நம்பிக்கொண்டிருந்தோமோ அதெல்லாம் பின்னடைவாக இருந்துள்ளது. அதை காக்கும் வைத்தியர்களாக நாம் மட்டுமே இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு நான் இருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன். இதை சுய நலத்தில் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு இது வேண்டும். என்னுயிரும், என் வருங்கால தமிழ் சந்ததி நலனும் சம்மந்தப்பட்ட விஷயம். இது பொதுநலம் இல்லை. சுயநலம்.எனது காலும், மனமும் இந்த மண்ணில் பதிவுற்றுவிட்டது.
சாமியாக கும்பிடுங்கள்
பகுத்தறிவாளன் ஏதோ சொல்கிறான் என நினைக்க வேண்டாம். நீங்கள் வைத்திருக்கும் தெய்வ பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மழையையும், ஆறுகளையும், குளங்களையும் சாமியாக கும்பிடுங்கள். ஒரு பகுத்தறிவாளன் இதை சொல்கிறேன் என்றால் எவ்வளவு பதறிப்போயிருப்பேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.