சென்னையில் உடல் எடை குறைப்பு ஆபரேசன் செய்த சிங்கப்பூர் பெண் மரணம்
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் எடையை குறைக்க ஆபரேசன் செய்த சிங்கப்பூர் பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு ஆபரேசன் செய்ய வந்த சிங்கப்பூர் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த பெண்ணின் பெயர் அலிசா மிடியனின் கான், சிங்கப்பூரில் வசித்து வந்த இவர், 85 கிலோ உடல் எடை காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதிக எடையினால் சிரமப்பட்ட இவருக்கு திருமணமாகி குழந்தைபிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்காரணமாக உடல் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அலிசா அனுமதிக்கப்பட்டார். அவரது கணவரும் உடன் வந்தார்.
அலிசாவிற்கு எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அலிசா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை அலிசாவின் கணவர் ஏற்றுக்கொள்ளவில்லை .
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு , எனது மனைவியைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று அலிசாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். அலிசாவை வென்டிலேட்டரில் வைத்துள்ளதாகவும் , மேலும் பரிசோதனை நடந்து வருவதாகவும் டாக்டர்கள் கூறினர். இப்போது இறந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இது மருத்துவர்களின் தவறால் ஏற்பட்ட மரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை சம்பவங்கள் தோல்வியடைவது அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது தனியார் மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகள் உடல் குறைப்பு அறுவைசிகிச்சை செய்துகொண்டனர். அதில் மூத்த சகோதரி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.