கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டம்... சமூக ஆர்வலர் கைது
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் பெரியார் மணியை போலீஸார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி(34). சமூக ஆர்வலரான இவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டதில் ஈடுபட்டார். அப்போது, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசு இலவச புத்தக பை, மற்றும் காலணிகளை வழங்கவில்லை எனகூறி போராட்டம் நடத்தினார். பிச்சை எடுத்த சுமார் ரூ.1000 பணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் செல்ல முயன்ற அவரை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இது குறித்து பெரியார் மணி கூறுகையில்,
கடந்த 6 மாதங்களுக்கு இதேபோல, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கப்போவதாக போராட்டம் நடத்தினேன். அப்போது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆனால் இன்னும் ஏழை குழந்தைகளுக்கு, காலணி புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இந்நிலையில், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி, அந்த பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்தேன். அப்போது போலீஸார் என்னை கைது செய்து விட்டனர் என்று கூறினார்.
கைதான பெரியார் மணி, மீது அரசுக்கு எதிராக செயல்படுவது, அரசை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.