பாடத்தை ரசித்து நடத்திய இளங்கோ சார்.. சிரித்துப் பேசி அறிவு புகட்டிய சரஸ்வதி மிஸ்...!
சென்னை: ஆசிரியர்கள் தினமான இன்று அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அப்படி தெய்வத்திற்கு முன்பு குருவை கூறும் அளவுக்கு ஆசிரியர்களுக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் உள்ளது. கற்பித்தல் என்பது தொழில் அல்ல.
ஒவ்வொருவரின் வாழ்விலும் பல ஆசிரியர்கள் வந்து சென்றிருப்பார்கள். இந்த கட்டுரையில் ஒன்இந்தியா வாசகி ஒருவரின் அனுபவத்தை பார்ப்போம். அவர் ஆசிரியர்கள் பற்றி கூறுகையில்,
சரஸ்வதி மிஸ்
ஆசிரியர்கள் என்றால் என் நினைவுக்கு முதலில் வருபவர் எனக்கு இரண்டாம் வகுப்பு எடுத்த சரஸ்வதி டீச்சர். எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார்கள். தப்பே செய்தாலும் திட்டாமல் திருத்துவார்கள்.
நிர்மலா மிஸ்
குழந்தைகள் ஆசிரியர்களிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள். நான் 3ம் வகுப்பு படிக்கையில் சாப்பிட்டுவிட்டு எப்படி கை கழுவ வேண்டும் என்று நிர்மலா மிஸ் கற்றுக் கொடுத்தார்கள். இன்றும் கை கழுவுகையில் அவர்கள் நினைவு வரும்.
ஜோதி
எத்தனை குறும்பு செய்தால் செல்லமாக அதட்டி அடங்க வைத்த 4வது வகுப்பு ஆசிரியை ஜோதியை நினைத்தால் இன்றும் முகத்தில் சிரிப்பு மலரும்.
சத்யமூர்த்தி
கம்யூப்ட்டர் சயன்ஸ் பாடம் எடுத்த சத்தியமூர்த்தி சார், கெமிஸ்ட்ரி எடுத்த ஜலாலுத்தீன் சார் ஆகிய இருவரும் பொறுமையின் சிகரங்கள். சத்தியமூர்த்தி சார் கையில் பெருவிரலில் மட்டும் நீளமாக நகம் வைத்திருப்பார். ஒரு நாள் அது உடைந்திருந்தது கேட்டதற்கு என் பெண்டாட்டி நானும் வேலைக்கு போகிறேன் என் சேலையை துவச்சுப்போடுவிட்டு போய்யான்னு சொன்னா துவைத்தேன் நகம் உடைந்துவிட்டது என்றார்.
செல்வம்
ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைவரின் பாராட்டு மழையில் நனைந்து வளர்ந்த எனக்கு பிடிக்காத வாத்தியார் என்றால் அது கணக்கு வாத்தியார் செல்வம். காரணம் அவர் என்னால் பிற பாடங்களை போன்று கணக்கில் முதல் மதிப்பெண் வாங்க முடியாததை தினம் தினம் திட்டி அவமானபடுத்தியது.
பரிமளா
உன்னால் முடியும் என்று எப்பொழுதும் ஊக்கப்படுத்தி என் குடும்பத்தில் நான் முதல் பட்டதாரியாக காரணமான பரிமளா மேடமை மறக்க முடியாது.
பர்வதவர்த்தினி
கல்லூரிக்கு சென்றபோது பாடம் எடுத்த பர்வதவர்த்தினி மேடம் ஆசிரியை அல்ல அன்பான தோழி.
இளங்கோ, காளிதாசன்
பாடத்தை ரசித்து ரசித்து நடத்துவார் இளங்கோ சார். காளிதாசன் சாரோ ஒரு நிமிடம் கோபத்தில் பொங்குவார் அடுத்த நிமிடமே சாந்தமாகிவிடுவார். மாணவர்களை பாராட்ட தவறாதவர்.
ஜான்
கஷ்டமான பாடத்தையும் எளிமையாக்கிவிடுவார் ஜான் சேகர் சார். அவரை பார்த்து பலர் பயந்தாலும் பழக இனிமையானவர்.
காதர், அறிவு
வேலைக்கு சென்ற இடத்தில் என்னை சிறு பிள்ளையை போன்று நினைத்து வேலையை பொறுமையாக கற்றுக் கொடுத்த காதர் சாரும், அறிவு சாரும் என் சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் அடங்குவார்கள்.
A reader of Oneindia has shared her list of favourite teachers with us.