எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கிய கருணாநிதி!
சட்டசபையில் காமராஜர் படத்தை வைப்பதற்காக அந்த படத்தின் கீழ் என்ன வாசகம் எழுதலாம் என்று முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு கருணாநிதி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
சென்னை: சட்டசபையில் காமராஜரின் திருவுருப்படத்தை வைக்கும் போது அந்த படத்தின் கீழ் உழைப்பே உயர்வு தரும் என்று எழுதலாம் என முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு ஐடியா கொடுத்ததே கருணாநிதிதான்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் சட்டசபைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவு்ம கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு கருணாநிதிக்கு பிடித்த விஷயங்கள், அவர் கோபப்பட்ட சம்பவங்கள், வருத்தப்பட்ட விஷயங்கள், மகிழ்ச்சி அடைந்த விஷயங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவராவே தெரிவித்திருக்கிறார். அவற்றுள் வாசகர்களுக்காக சில...
பிடித்த சட்டமன்றப் பேச்சு
எம்.ஜி.ஆர். ஆட்சியில் எதிர்கட்சித் தலைவராக கருணாநிதியிருந்த போது, "பூம்புகார்" நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த "பல்கேரியா பால்டிகா" என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு. இந்த பேச்சு தனக்கு பிடித்தமானது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத பதில் - சொன்னது
திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோயிலில் வைரவேல் திருடப்பட்டதைக் கண்டித்தும் கருணாநிதி எதிர்கட்சித் தலைவராக இருந்த போது திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டார். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், "கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப் பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!" என்றார் கிண்டலாக. உடனே கருணாநிதி எழுந்து, "திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!" என்று கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. அவர் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.
மறக்க முடியாத பதில்- கிடைத்தது
கடந்த 1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மாவால் தபால் தலைகளுக்காக வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசுக்கு உண்டா?" என்று கருணாநிதி கேட்டதற்கு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, "சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்" என்று கூறிய பதில் தான் கருணனாநிதிக்கு கிடைத்த மறக்க முடியாத பதிலாம். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்ற மண்டபத்தில் கடந்த 1964 அன்று அப்போதைய ஜனாதிபதி ஜாகீர் உசேனால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் திமுக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்றாம்.
முதல் பாராட்டு
கருணாநிதியின் முதல் கன்னிப் பேச்சில், அவரது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, "கையேரு வாரம், மாட்டேரு வாரம்" என்ற பிரச்சினை குறித்து அவர் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த யு.கிருஷ்ணாராவ் , "Very Good Speech" என்று எழுதிச் செயலாளர் மூலமாக அவரிடம் கொடுத்தனுப்பினார். அதுதான் சட்டமன்றத்தில் அவருக்குக் கிடைத்த முதல் பாராட்டு.
வருத்தப்பட வைத்த சம்பவம்
1976-ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989-இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை கருணாநிதி படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி அவரது கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் கருணாநிதியை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.
மகிழ்ச்சிக்குரிய சம்பவம்
கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அவரது அறைக்குத் தனிமையிலே கருணாநிதியை அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு கருணாநிதியும் மகிழ்ச்சியுடன், "உழைப்பே உயர்வு தரும்!" என்று எழுதிக் கொடுத்தார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியுமா என்று கருணாநிதி கூறினார்.