மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை - வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்
நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலையில் சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் நெல்லை மாவட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார், கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்துள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும்.
இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி நீடிக்கும். கார் பருவ நெல் சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு பாபநாசம் அணை - 52 மி.மீ, பாபநாசம் கீழ் அணை - 11 மி.மீ, சேர்வலாறு அணை - 22 மி.மீ மணிமுத்தாறு அணை - 8.2 மி.மீ, கடனாநதி அணை - 10 மி.மீ, ராமநதி அணை - 11 மி.மீ, கருப்பாநதி அணை - 6 மி.மீ, குண்டாறு அணை - 28 மி.மீ, அடவிநயினார் அணை - 15 மி.மீ, கொடுமுடியாறு அணை - 20 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு - 5.2 மி.மீ அளவு மழை அளவு பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,610.53 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 520 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 18 கனஅடி, கடனாநதி அணைக்கு 100 கனஅடி, ராமநதி அணைக்கு 64 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 21 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 32 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 81.30 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 52 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 90.55 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 8.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடனா நதியில் 52 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைப்பகுதியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது. ராமநதியில் அணை நீர்மட்டம் 62 அடியாக உள்ளது. இந்த அணைபபகுதியில் 11 மிமீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அம்பையில் 2.2, ஆய்க்குடியில் 10.2, சேரன்மகாதேவி, சங்கரன்கோவிலில் 2, பாளையங்கோட்டை 1, ராதாபுரத்தில் 5, செங்கோட்டையில் 15, சிவகிரியில் 3, தென்காசியில் 14 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சாகுபடி தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து 1,125 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து பாசனத்துக்கு சனிக்கிழமை (ஜூலை 2) தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தீவிரமடைந்து அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.