பிளாஸ்டிக் தவிர்ப்போம் "சிறப்பு குழந்தைகள்" விழிப்புணர்வு ஓட்டம்
பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் கே.ஆர்.எம். சிறப்பு பள்ளி சார்பில் நவம்பர் 14ம் தேதி விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை: பிளாஸ்டிக் இயற்கைக்கு கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உண்டாக்கும். எளிதில் அழியாது. எனவே, பயன்படுத்தாதீர்' என என்னதான் கோஷம் போட்டாலும், பிளாஸ்டிக் அரக்கன் அழிந்தபாடில்லை.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் தொடங்கி பெரிய கார் பாகங்கள் வரையில் இன்று பிளாஸ்டிக் இல்லாத பொருள்களே இல்லை என்றாகி விட்டது. விலை குறைவு, எடை குறைவு, உலோகத்துக்கு இணையான வலிமை போன்ற காரணங்களால் ஆரம்ப காலங்களில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது இந்த பிளாஸ்டிக். இன்று புலி வாலைப் பிடித்த கதையாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற முழக்கத்தை முன்வைத்து குழந்தைகள் தினத்தன்று சிறப்பு குழந்தைகள் பங்கு பெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
பிளாஸ்டிக் விழிப்புணர்வு
சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் இந்த பிளாஸ்டிக் அழிய பல நூறு ஆண்டுகள் ஆகும். ஆதலால்தான் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான, பழுதற்ற உலகை விட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம் என அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வீதி, வீதியாக கோஷத்துடன் வலம் வருகின்றன.
குழந்தைகள் தினம்
சென்னையில் 4 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் கே.ஆர்.எம். பள்ளி குழுமங்கள் சார்பில் செயல்படும் கே.ஆர்.எம். சிறப்பு பள்ளி சார்பில் பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு ஓட்டம்
சென்னை மெரீனா கடற்கரை கண்ணகி சிலையில் தொடங்கி விவேகானந்தர் இல்லம்வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரம் சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள்
நடிகர் எஸ்வி சேகர், வசீகரன் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி பி.சந்தோஷம், திலகவதி ஐ.பி.எஸ்,டிராபிக் ராமசாமி, வெள்ளையன், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, மனுஷபுத்திரன், ஜோதிபாசு, எக்ஸ்னோரா நிர்மல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு குழந்தைகள்
இந்த சிறப்பான விழிப்புணர்வு ஓட்டத்தில் 23 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த பிள்ளைகளை பங்கு பெறச்செய்யும் பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திய கே.ஆர்.எம்.சிறப்பு பள்ளியின் இயக்குனர் நர்த்தனா முடிவில் நன்றி கூறினார்.