28ம் தேதி 86 தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: இலங்கை சிறைகளில் உள்ள 86 தமிழக மீனவர்கள் வரும் 28ம் தேதி விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும்போது இலங்கை ராணுவத்தினரால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மே திங்கள் முதல், நாளது தேதி வரையில் 73 கடிதங்கள் வாயிலாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, கடந்த 22.9.2015 முதல் 14.10.2015 வரை இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையறிந்து துயரமுற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமது 22.9.2015, 25.9.2015, 30.9.2015, 2.10.2015, 11.10.2015, 13.10.2015 மற்றும் 14.10.2015 ஆகிய நாளிட்ட கடிதங்கள் மூலம் தமிழக மீனவர்கள் கைது பற்றிய விவரங்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அக்கடிதங்களில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதுமட்டுமன்றி, பிரதமர் இந்நிகழ்வில் நேரடியாக தலையிட்டு அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக, இலங்கை சிறைகளில் வாடும் 86 மீனவர்கள், 28.10.2015 அன்று இலங்கை அரசால் விடுவிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக சிறையில் உள்ள இரண்டு இலங்கை மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் 28.10.2015 அன்று விடுவிக்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications