கச்சத்தீவு அருகே 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை விரட்டியத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்து மீன்பிடிக்க கூடாது. உடனே புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட தொடங்கினர்.
அப்போது திடீரென இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அத்துடன் விசைப்படகுகளுக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும் தாக்கினர். மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும், கடலில் விரித்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். இதனால் மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவிலேயே கரை திரும்பினர்.
துப்பாக்கி முனையில் நடந்த இந்த தாக்குதல் மீனவர்களிடையே பயங்கர பீதியை ஏற்படுத்தியுள்ளது