முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக கரூரில் பள்ளிகள் மூடல்? புதிய சர்ச்சை
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கரூரில் அனைத்துப்பள்ளிகளையும் கட்டாயப்படுத்தி மூட வைத்துள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அரசு தரப்பு இதை மறுத்துள்ளதூ.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கரூரில் அனைத்துப்பள்ளிகளையும் கட்டாயப்படுத்தி மூட வைத்துள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் தமிழக அரசு இதை மறுத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கரூரில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் நூற்றாண்டு விழா கூட்டத்திற்காக, கரூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் ஆட்சியாளர்கள் அரசியல் பேசுகின்றனர் என்றார்.
எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவே
எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாகவும் அவர் சாடினார். நூற்றாண்டு கூட்டத்திற்கு நூறு நாள் வேலை திட்ட ஆட்களை அழைத்து வருகின்றனர் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த விழாவிற்காக, கரூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர் என்றும் ஸ்டாலின் கூறினார். இந்த விழாவை நடத்துவது தலைமை செயலாளர். அவர் இதை தடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தை நாடுவோம்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இல்லாவிடில் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
ஆனால் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.