கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நக்கீரன் கோபால் கைது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனைக்கு வந்தார் மு.க.ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நக்கீரன் கோபால் கைது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கோபாலை விடுவிக்காவிட்டால் இந்த அரசு விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தமிழகத்தில் உள்ள அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. நக்கீரன் கோபால் மீது பாய்ந்த வழக்கு ஏன் எச். ராஜா மீது பாயவில்லை. ஏன் எஸ்.வி.சேகர் மீது பாயவில்லை.
அறநிலையத்துறை ஊழியர் குடும்பங்களை கொச்சைப்படுத்திப் பேசியவர் எச். ராஜா. நீதிபதிகளையும், காவல்துறையினரும் கொச்சைப்படுத்திப் பேசியவர் எச். ராஜா. தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று முழங்கியவர் எச். ராஜா. ஆனால் ஏன் அவர் மீது தேசதுரோக வழக்குப் பாயவில்லை.

ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை களங்கப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை. போலீஸ் துணையோடு எச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் வலம் வந்ததை நாடே பார்த்தது. பாஜகவுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. நேரம் கொடுக்கப்படும்போது ஆளுநரை சந்தித்து அனைத்தையும் விளக்குவோம் என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications