மழையில் நனைந்து கொண்டே விருதுநகர் மக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்
விருதுநகர் : தனது பயணத்தின் போது சாரல் மழைக்கு இடையே நடந்து சென்று பொதுமக்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அதைத் தொடர்ந்து முதியோர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்ளுடனான கலந்துரையாடலிலும் அவர் ஈடுபட்டார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து வருகிறார். அதில், மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மாலையில் விருதுநகருக்கு வந்த அவர் தெப்பக்குளத்தில் இருந்து பஜார் வழியாக சாரல் மழை பெய்ததை பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டே பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். பராசக்தி மாரியம்மன் கோவிலை கடந்து செல்கையில் கடைக்கு முன்பு கூட்டமாக நின்றிருந்த முஸ்லீம் சமுதாயத்தினருக்கு ஸ்டாலின் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதியோர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் கல்லூரி சாலை எதிரே உள்ள சரஸ்வதி அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அதோடு அவர்களிடம் முக்கிய திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பான மனுக்களையும் பெற்று அவர் பேசும் போது, இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு தரப்பட்டவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதை நானும் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அதை தேர்தல் அறிக்கையில் இடம் பெயரச் செய்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்.
அதற்கு முன்னதாக உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்றால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் கோரிக்கைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications