கோவையை மிஞ்சணும் ஆமா... கடலூர் பேரணிக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்
கடலூர்: கடலூர் பேரணிக்கு வருவீங்கல்ல... இதுதான் இன்றைக்கு திமுகவின் முக்கிய மாவட்ட தலைவர்களைப் பார்த்து ஸ்டாலின் கேட்கும் கேள்வி. காரணம் இல்லாமல் இல்லை. கோவையில் பாமக கூட்டிய கொங்கு மண்டல மாநாட்டை மிஞ்சவேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் கட்டளையிட்டுள்ளாராம் ஸ்டாலின். குமரி முதல் திருவள்ளூர் வரை உள்ள திமுகவினர் அனைவரும் கடலூருக்குப் படையெடுக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் உத்தரவாம்.
‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற போஸ்டர் போல நீதி கேட்கும் பேரணிக்கு போஸ்டர் தயார் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல பிரம்மாண்ட போஸ்டரை திமுகவினர் தயாரித்து ஒட்டியுள்ளனராம்.
துருப்பிடித்த தமிழ்நாடு
நீதி கேட்கும் பேரணியை முன்னிலைப்படுத்தும் வகையில் ஸ்டாலினின் முகநூல் பக்கத்தில் புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகம் துரு பிடித்தது போல போட்டு அதை சுற்றி இரும்பு சங்கிலி போட்டு பூட்டு போடப்பட்ட போஸ்டர்தான் அலங்கரிக்கிறது.
3டி எபெக்ட் விளம்பரம்
கோவை மாநாட்டிற்கு அன்புமணி தயார் செய்தது போல தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் வகையில் 3டி எபெக்ட் விளம்பரம் ஒன்றை தயார் செய்யக் கூறினாராம் ஸ்டாலின். அதே போலவே போஸ்டரை ரெடி செய்து விட்டனர் திமுகவினர்
5000 போஸ்டர்கள்
நீதி கேட்கும் பேரணிக்கு தயார் செய்யப்பட்ட போஸ்டர்களை ஒவ்வொரு மாவட்டதிலும் குறைந்த பட்சம் 5000 வரை ஒட்டவேண்டும் என்று ஸ்டாலின் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.
ஒட்டவே இடமில்லையே
கடலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் எல்லாம் ஒரே அன்புமணி போஸ்டராகத்தான் இருக்கிறதாம். எனவே அந்த போஸ்டரின் மீது நீதி கேட்கும் பேரணி போஸ்டரை ஒட்டுங்கள் என்று கூறியுள்ளாராம் கடலூர் மாவட்ட செயலாளர். இதில் யாருடைய படமும் இல்லை என்பதுதான் கூடுதல் சிறப்பம்சம்.
மாறியது ஏன் தெரியுமா?
கடலூரில் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடுவதாகத்தான் முதலில் திட்டம், பிறகுதான் கொங்கு மண்டல மாநாடு போல பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு நீதி கேட்கும் பேரணியாக மாற்றப்பட்டதாம். ஆனால் பேரணிக்கான போஸ்டர்தான் சீனியர்களுக்குப் பிடிக்கவில்லையாம். காரணம் தலைவர்களின் படம் யாருமே இல்லை என்பதுதான்.
நீதி கிடைத்தால் சரிதான்
எப்படியோ ஸ்டாலினை வெறுப்பேற்ற அன்புமணி காய்நகர்த்துவது போல அன்புமணியை கடுப்பேற்ற திமுகவினர் கடலூர் பேரணியை வைத்து காய் நகர்த்துகின்றனர். எப்படியோ நீதி கிடைத்தால் சரிதான்.