தமிழகத்தில் மலரும் புதிய கூட்டணி: அச்சாரம் போட்ட ஸ்டாலின், வைகோ
சென்னை: மதிமுக உடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் வைகோவும் சந்தித்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
2004-ஆம் ஆண்டு பொடா வழக்கில் இருந்து வைகோ விடுதலையானபோது அவர் இல்லத்துக்குச் சென்று மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்து வந்தார்.அதன் பிறகு இருவரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரும் சந்தித்துக்குக் கொண்டது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பேசவில்லை
இந்தச் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திருமண நிகழ்ச்சிக்கு வந்தேன். வைகோ இருப்பது தெரிந்ததும், அவரைச் சந்தித்துப் பேசினேன். வைகோவைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது ,அரசியல் எதுவும் பேசவில்லை என்றார்.
விருப்பம் நிறைவேறும்
அப்போது செய்தியாளர்கள், புதிய கூட்டணி உருவாகுமா என்று கேள்வி எழுப்பினர். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? என்று பதிலுக்கு கேட்டதோடு, உங்கள் விருப்பம் அதுவானால் அது நிச்சயம் நிறைவேறும் என்று என்று சூசகமாக விளக்கமளித்தார்.
சந்தித்தது மகிழ்ச்சி
திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரசியல் எதுவும் பேசவில்லை. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் மதிமுக உள்ளது என்றார்.
கூட்டணிக்கு மகிழ்ச்சி
தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டார். எனினும், இந்தச் சந்திப்பின் போது சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசவில்லை என்றும் வைகோ விளக்கினார்.
ஒரே விமானத்தில்
தேவர் ஜெயந்தி விழாவுக்காக வைகோவும் ஸ்டாலினும் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் மதுரைக்குச் சென்றனர். அதில் புதிய அணி அமைப்பது தொடர்பாகப் பேசப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
அதிமுகவை வீழ்த்த
2016 சட்டசபை தேர்தலில் ‘மெகா' கூட்டணி அமைக்கும் முயற்சியில் தி.மு.க. இறங்கியுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி பூந்தமல்லியில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. ஆட்சியை பாராட்டினார். அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர் பொது எதிரியை வீழ்த்துவதற்காக நண்பர்கள் யாருடனும் கூட்டணி சேர தயார் என்று அறிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் வைகோவின் பேச்சை சுட்டிக் காட்டினார்.
நல்ல புரிதல்
சமீபத்தில் ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொடா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த வைகோவை தி.மு.க. தலைவர் கருணாநிதி சிறைக்கு சென்று சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார். தமிழக சட்டசபையில் தே.மு.தி.க. வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததாகவும் கூறினார்.
மெகா கூட்டணிக்கு அச்சாரம்
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக ‘மெகா' கூட்டணி அமைவதற்கான அச்சாரமாக மு.க.ஸ்டாலின்-வைகோ சந்திப்பு அச்சாரமாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.
வெறும் யூகம்தான்
இதனிடையே, தி.மு.க. - மதிமுக இடையே கூட்டணி மலர வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இது யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தி என்றார்.