பள்ளி திறந்து பல நாட்கள் ஆகியும் இலவச பாஸ் இல்லை - தவிப்பில் மாணவர்கள்
நெல்லை: தமிழகத்தில் பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் ஆகியும் இலவச பஸ் பாஸ் இல்லாததால் மாணவ, மாணவிகள் தவியாய் தவித்து வருகி்ன்றனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்டூ வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அருகில் இருக்கும் போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறந்த பின் ஒரு சில நாட்களில் இலவச பஸ் பாஸ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கின.
பள்ளிகள் தொடங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என 5 மாதம் ஆகியும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பஸ் பாஸ் வழங்கும் பணி முழுமை அடையவில்லை. கடந்த ஆண்டின் பஸ் பாஸினை ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்தாண்டு புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு இது வரை பஸ் பாஸ் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தமிழக தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே இலவச பஸ் பாஸ் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே பஸ்சில் பயணம் செய்யும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் இலவச பஸ் பாஸ் பெற்று கொள்ள வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அரசிடம் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பஸ் பாஸ் கிடைக்காததால் பல மாணவ, மாணவிகள் நெடும் தொலைவில் இருந்து வந்து சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அவர்கள் தவிப்பில் உள்ளனர்.