பிளஸ் 2 ரிசல்ட்.. . பதற்றமில்லை... பரபரப்பில்லை - ரிலாக்ஸ் மூடில் மாணவர்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ரேங்க் முறை நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் பதற்றமும், பரபரப்பும் இன்றி ரிலாக்ஸ் ஆக உள்ளனர்.
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களும் பதற்றம், பரபரப்பு இன்றி ரிலாக்ஸ் ஆக உள்ளனர். இதற்குக் காரணம் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டதுதான் என்கின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் வேண்டாத தெய்வமில்லை, வைக்காத நேர்த்திக்கடனில்லை. விடிய விடிய படித்து அதை பரிட்சையாக எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தாலும் ஒருவித பதற்றத்துடனேயே காத்திருப்பார்கள்.
எந்த கொண்டாட்டங்களையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் ரிசல்ட் பற்றிய பயம்தான். தேர்ச்சி பெற்று விடுவோம் என்றாலும் மதிப்பெண்கள் எவ்வளவு வருமே என்பதுதான் மாணவர்களின் கவலையாக இருக்கும்.
ரேங்க் முறையில்லை
இந்த ஆண்டு முதல் ரேங்க் முறையில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சக மாணவனைப் போட்டியாளனாகக் கருதும் மனப்போக்கை மாற்றிவிடும் அறிவிப்பு இது. மிகுந்த வரவேற்புக்கு உரியது என்று கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரிலாக்ஸ் மூடில் மாணவர்கள்
ஆண்டுதோறும் ரிசல்ட் வரும் நாளில் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் ஒருவித பதற்றம், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்த ஆண்டு இந்த பதற்றமும், பரபரப்பும் குறைந்துள்ளது. ரிலாக்ஸ் ஆக காணப்படுகின்றனர்.
வரட்டும் பார்க்கலாம்
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடும்போது மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மார்க்கில் முதல் இடத்தை இழந்துவிட்டேன் என்று மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இனி அது இருக்காது என்பதால் ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர்.
எஸ்எம்எஸ் அறிவிப்பு
நெட் சென்டரை தேடி ஓட வேண்டியதில்லை. எல்லாமே எஸ்எம்எஸ் மூலம் வந்து விடும் என்பதால் மாணவர்களை விட பெற்றோர்கள்தான் மிகவும் ரிலாக்ஸ் ஆக இருக்கின்றனர்.