தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடர் சாவு - அண்ணா பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்
சென்னை: தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து இறப்பதைத் தடுத்து நிறுத்தக்கோரி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணாபல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் அபிநாத் கல்லூரி வளாக கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுபோல இந்த வருடம் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் மர்மமான முறையில் கல்லூரி வளாகத்தில் பிணமாக கிடந்தனர்.
இதையொட்டி கல்லூரிகளில் மாணவர்களின் சாவுகளை தடுக்கக்கோரி சாய்ராம் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று அண்ணாபல்கலைக்கழகம் முன்பு கூடினார்கள்.
அவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர். இதையொட்டி அண்ணாபல்கலைக்கழக மெயின் வாசல் அருகே மாணவர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் சிலர், "சாய்ராம் கல்லூரியில் மாணவர் அபிநாத் இறந்ததுபோல இந்த வருடம் சமீபத்தில் மட்டும் 4 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் அண்ணாபல்கலைக்கழகம் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கட்ட முடியாமல் மாணவர்கள் திணறுகிறார்கள்.
பஸ் கட்டணம், சாப்பாட்டு கட்டணம் என்று பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. மேலும் சாப்பாடு சாப்பிடுவது மாணவர்களின் விருப்பம் என்று அண்ணாபல்கலைக்கழகம் சொல்லவேண்டும்.
மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரு கமிட்டியை அரசு அமைக்கவேண்டும். அந்த கமிட்டியில் அண்ணாபல்கலைக்கழக அதிகாரிகள், கல்லூரி நிர்வாக பிரதிநிதிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெறவேண்டும். முதல் கட்டமாக சாய்ராம் கல்லூரியில் படித்த மாணவர் அபிநாத் சாவு பற்றி விசாரிக்க கமிட்டி அமைக்கப்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் மதுமதி, அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம், பதிவாளர் எஸ்.கணேசன் ஆகியோர் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி ஆணைய அலுவலகத்திற்கு மாணவர்கள் சிலரை அழைத்து பேசினார்கள். இதையொட்டி மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.