கட்டண உயர்வை சமாளிக்க வாடகை வீடுகளுக்குத் தனி மீட்டர்... மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டு உரிமையாளரிடம் தனி மீட்டர் பொருத்த சொல்ல வேண்டும். வாடகைதாரர் மீட்டர் கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. உரிமையாளர் தனி மீட்டர் பொருத்த மறுத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மின்கட்டணம் இன்றுமுதல் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சொந்த வீடுகளில் வசிப்பவர்களை விட வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் பாடுதான் திண்டாட்டம்.
காரணம் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் அரசு நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
சென்னையில் 1 யூனிட்டுக்கு 8ரூபாய் வரை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாங்கி விடுகிறார்கள். காரணம் கேட்டால் ஒரே மீட்டரில்தான் யூனிட் பதிவாகிறது. அதனால் அதிகம் வாங்குகிறோம் என்று கூறி சமாளிக்கிறார்கள். அதாவது வீட்டு உரிமையாளரின் கரண்டு பில்லையும் சேர்த்து வாடகை வீட்டில் இருப்பவர்கள் கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று முதல் மின் கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளதால் வீடுகளில் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் இனிமேல் உச்சத்தை தொடும். அவர்கள் 1 யூனிட்டுக்கு 4 ரூபாயில் இருந்து ரூ.4.60 ஆக உயர்த்தி கட்ட வேண்டும். இதில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக பணம் கொடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.
சென்னையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் 1 யூனிட்டுக்கு 5ரூபாய் முதல் 8 ரூபாய் வரை கொடுக்கின்றனர். 2 மாதத்துக்கு 120 யூனிட் பயன்படுத்தினாலே வாடகைக்கு இருப்பவர்களிடம் யூனிட்டுக்கு 7ரூபாய் வீதம் 840 ரூபாயை வீட்டு உரிமையாளர் வசூலித்து விடுவார்கள். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டு உரிமையாளரிடம் தனி மீட்டர் பொருத்த சொல்ல வேண்டும்.
இதற்கு செலவு சிங்கிள் பேஸ் மீட்டருக்கு ரூ.1650 தான் டெபாசிட் கட்டணம். த்ரி பேஸ் (மும்முனை மின்சாரம்) மீட்டருக்கு ரூ.7500 கட்டணம் டெபாசிட் மின்வாரியத்தில் கட்டினால் வாடகை வீடுகளுக்கு தனித்தனி மீட்டர் கொடுத்து விடுவோம். வாடகைதாரர் மீட்டர் கேட்டாலும் கொடுப்போம்.
எனவே பொது மக்கள் வாடகை வீடு பார்க்கும் போது தனி மீட்டர் இருக்கிறதா? என்பதை பார்த்து தான் குடியேற வேண்டும். இல்லாவிட்டால் தனி மீட்டர் பொருத்த சொல்ல வேண்டும். உரிமையாளர் தனி மீட்டர் பொருத்த மறுத்தால் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.