இலங்கைக் கடற்படையை எதிர்த்துப் போராட்டம் நடத்த பாம்பன் வருகிறார் சுஷ்மா சுவராஜ்
திருச்சி: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்குவதைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கடல் தாமரை என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கு பாஜக லோக்சபா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி வந்த அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனக்கு பக்க பலமாக இருந்த ஒரே காரணத்திற்காக தமிழர்களை மொத்தமாக கொன்று குவித்தது இலங்கை அரசு.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பாமகவுடன் பேசி வருகிறோம். மதிமுகவுடன் ஏற்கனவே பேசி விட்டோம். அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறது.
தேமுதிகவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். கேப்டன் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஜனவரி மாத மத்தியில் சென்னைக்கு விஜயம் செய்வார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. விரைவில் அனைத்து நடைமுறைகளையும் முடிப்போம். பிப்ரவரி மாதத்தில் இது முடிவடையும். மார்ச் மாதத்திலிருந்து இன்னும் வேகம் பிடிக்கும் என்றார் அவர்.