கழுத்தில் ஏற்பட்ட காயம் குணமாகிறது.. திட உணவு சாப்பிட ஆரம்பித்தார் ராம்குமார்
சென்னை: சுவாதி கொலை வழக்கில், கொலையாளி என்ற சந்தேகத்தின்பேரில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின்போது, பிளேடால் தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவர் கழுத்தை அறுக்கும்போது எடுத்த போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகின.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் காயத்திற்கு லேசான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 18 இடங்களில் வெட்டு காயம் இருந்ததால், தையல் போடப்பட்டதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் சிகிச்சை
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அழைத்துவரப்பட்ட ராம்குமாரை தற்போது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தேறுகிறது
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு நிருபர்களிடம் இன்று கூறியதாவது: ராம்குமார் உடல்நிலையை இன்று காலை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும், 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
இட்லி, இடியாப்பம்
நெல்லையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது திரவ உணவு அளித்துள்ளனர். ஆனால் இன்று திட உணவு கொடுத்து சாப்பிட முடிகிறதா என சோதித்து பார்க்கப்பட்டது. அதன்படி, இன்று காலை ராம்குமாருக்கு இட்லி மற்றும் இடியாப்பம் வழங்கப்பட்டது. சாப்பிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிந்தது.
காயம் ஆறுகிறது
ராம்குமார் இப்போது நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார். அவர் குரலில் வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கழுத்தில் பிளேடால் ஆழமாக வெட்டியதால் நெல்லை மருத்துவமனையில் 18 தையல் போட்டிருந்தனர். அந்த தையல் சரியாக போடப்பட்டுள்ளது. எனவே அதில் ரத்த கசிவு எதுவும் இல்லை. காயம் மிகவும் வேகமாக ஆறி வருகிறது.
முன்னேற்றம்
தையலை எப்போது பிரிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. ராம்குமார் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருந்தால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும். தொடர்ந்து அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது. இவ்வாறு நாராயணபாபு தெரிவித்தார்.
நீதிமன்ற காவல்
இதனிடையே, ராம்குமாரிடம் நேரில் விசாரணை நடத்திய, எழும்பூர் குற்றவியல் நீதிபதி கோபிநாத் அவருக்கு வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்துள்ளார். எனவே சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறியதும், ராம்குமார் புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.