தமிழகத்தில் ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்... மறுபக்கம் கோடை மழை!
சென்னை: தமிழகத்தில் எட்டு நகரங்களில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் வியர்வையில் குளித்து வருகின்றனர். அதேசமயம் குமரி மாவட்டத்தில் கோடை மழை கொட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அக்னி நட்சத்திரத்திற்கு இன்னும் சில வாரங்கள் இருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெயில் முன் கூட்டியே வாட்ட தொடங்கிவிட்டது. சில ஆண்டுகளாக இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் தான் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும். ஆனால் இந்த ஆண்டு இப்போதே அதிகபட்சமாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. திருச்சி, திருப்பத்தூர், சேலத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
ஈரோடு நகரில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு ஏப்ரல் முதல் வாரத்திலேயே 102 டிகிரி அளவுக்கு வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஈரோட்டில் காலை 10 மணிக்கே வெயிலின் ஆதிக்கம் தொடங்கி விடுகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் தான் பொதுமக்கள் வெளியே வர தொடங்குகிறார்கள்.
இளம்பெண்கள் தவிப்பு
இளம்பெண்கள் 2 சக்கர வாகனங்களில் செல்லும் போது அவர்கள் அணிந்து வரும் துப்பட்டாவை தலையில் முக்காடு போட்டு கொண்டு தான் செல்கிறார்கள். குழந்தைகளை அழைத்து வருபவர்கள் குடை மற்றும் துண்டுகள் இல்லாமல் வருவதற்கு தயங்குகிறார்கள். வெயில் தாக்கத்தின் காரணமாக கம்மங்கூழ் கடைகள், மோர், பழ ஜூஸ் கடைகள், இளநீர் கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது,
வறண்ட வானிலை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. திருச்சி, திருப்பத்தூர், சேலத்துக்கு அடுத்தப்படியாக, வேலூர், கரூர் பரமத்தியில் தலா 102 டிகிரி வெயில் பதிவானது.
மதுரையில் 101 டிகிரி
தர்மபுரி, மதுரை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெப்பம் பதிவானது. கோவையில் 99 டிகிரியும் தொண்டியில் 97டிகிரியும், சென்னை, கடலூரில் 95 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
கோடை மழை
இதனிடையே நாகை, கன்னியாகுமரியில் 94 டிகிரி வெப்பம் பதிவானாலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனையடுத்து ரப்பர் தோட்டங்களி்ல் பால் வடிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
அடுத்த வரும் 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 82. 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.