தமிழகத்தில் தீவிரமடைகிறது அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்..!
சென்னை: அரசு ஊழியர்களின் தீவிர வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரசு துறை ஊழியர்களும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளதால் அரசு நிர்வாகமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பணிபுரியும் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என ஒரு அரசு ஊழியர் சங்கங்களையும் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அரசு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 15 லட்சம் வாக்குகள் மற்றும் அவர்களது குடும்ப வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சத்தில், கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தும் சங்கங்களை மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் மற்றும் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
சாலை மறியல்
அரசு ஊழியர்களின் போராட்டம் இன்று முதல் தீவிரம் அடைகிறது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்துகொள்கிறது.
ஸ்தம்பிக்கும் தமிழகம்
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர், சாலைப்பணியாளர், பட்டுவளர்ச்சி, புள்ளியியல், பொதுசுகாதாரத்துறை, சாலை ஆய்வாளர், வணிகவரி, அங்கன்வாடி ஊழியர் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் அனைத்துமே பாதிக்கப்பட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்கள்
இதற்கிடையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடை பணியாளர்கள் தங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பிலும் இன்று முதல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ரேசன் கடை ஊழியர்கள்
இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பணியாளர்களும் பங்கேற்கிறார்கள். மாநிலம் முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போராட்டம் அறிவித்துள்ளதால், 18,257 ரேஷன் கடைகள் இயங்காது என்று கூறப்படுகிறது.
நிர்வாகம் முடங்கும் அபாயம்
இதனால் கிராமப்புற பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரசு துறை ஊழியர்களும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளதால் நாளை முதல் தமிழகம் ஸ்தம்பித்து, அரசு நிர்வாகமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தனித்தனியே போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த இரு அமைப்புகளும் ஒற்றுமையாக, 2015 பிப்ரவரி முதல், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் என, ஐந்து வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன; ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
ஜாக்டோ அமைப்பு
சில தினங்களுக்கு முன், இரு அமைப்புகளையும் தனித்தனியே அழைத்து, அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. பேச்சு தோல்வி அடைந்ததால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரத்தில், 'ஜாக்டோ' அமைப்பினரிடம் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், 'பிப்ரவரி 16ம் தேதிக்குப் பின், கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்தனர்; அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
பிப்ரவரி 17 முதல்
இந்நிலையில், 'ஜாக்டோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து, இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பிப்ரவரி 17 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பாதிக்கும் அபாயம்
பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் ஜாக்டோ அமைப்பினரும் தங்களின் போராட்டத்தை தீவிரபடுத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
எதிர்கட்சியினர் புகார்
அரசு ஊழியர்களின் போராட்டங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எந்த முயற்சியும் தமிழக அரசு எடுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இந்த போராட்டங்களை அரசு முடிவுக்கு கொண்டுவருமா? அல்லது அரசு முடங்குமா?