ஜெயலலிதா மரணம்: சசிகலா குடும்பத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த வியூகம்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்திடம் தீவிர விசாரணை நடத்தும் வகையில் சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்திடம் தீவிர விசாரணை நடத்தும் வகையில் சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஜெயலலிதா மரணத்தில் இருந்த சந்தேகம் வலுத்தது.
இந்நிலையில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார்.
3 மாதத்தில்
இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தனது விசா ரணையை மூன்று மாதங்களில் நடத்தி முடித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று அந்த அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை வியூகம்
அந்த அரசாணையில் சசிகலா குடும்பத்தினரை குறி வைத்தே விசாரணை வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எந்த சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன சிகிச்சை
மேலும் மருத்துவமனையில் அவருக்கு 22-9-2016 முதல் 5-12-2016 வரை அளிக்கப்பட்ட தொடர்ச்சியான சிகிச்சை முறைகள் பற்றி விசாரணை நடத்தப்படும். விசாரணை ஆணையச்சட்டம்-1952 பிரிவு மூன்றின்கீழ் துணை பிரிவு (1)-ன் படி இந்த விசாரணையை நடத்த அதிகாரம் வழங்கப்படுகிறது.
அரசாணையில் உத்தரவு
இது தவிர விசாரணை ஆணைய சட்டம் 1952 பிரிவு 5-ல் உள்ள உட்பிரிவுகளான 2, 3, 4 மற்றும் 5-ல் உள்ள அம்சங்கள்படியும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசி குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ஈபிஎஸும் ஓபிஎஸும் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என அமைச்சர்களும் நிர்வாகிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சசி குடும்பத்திற்கு நெருக்கடி
ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ளவர்களால் தாக்கப்பட்டார் என ஓபிஎஸ் அணியினர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில் எதனால் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என விசாரணை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியிருப்பது சசிகலா குடும்பத்திற்கு நெருக்கடி கொடுக்கவே எனத் தெரிகிறது.
அனைவரிடமும் விசாரணை
மேலும் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து இருப்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவை கூடவே இருந்து கவனித்த சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்படும் என்பது தெளிவாகியுள்ளது.
சசிகலாவுக்கான வியூகம்
குறிப்பாக சசிகலாவிடம் தீவிர விசாரணை நடத்தும் வகையில் இந்த விசாரணை வியூகம் வகுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி விசாரணை நடத்தும் பட்சத்தில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும், பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.