தமிழக அமைச்சரவையில் இருந்து 'எதிர்பார்க்கப்பட்ட' கே.பி முனுசாமி நீக்கம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றுமொரு அதிரடியாக அமைச்சர் கே.பி. முனுசாமியை டிஸ்மிஸ் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தருமபுரி, புதுச்சேரி, கன்னியாகுமரி தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் களையெடுக்கப்பட்டனர்.
இதில் முக்கியமாக கன்னியாகுமரி பச்சைமால், திருவள்ளூர் ரமணா மற்றும் தொண்டாமுத்தூர் தாமோதரன் ஆகிய 3 அமைச்சர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஆனால் அமைச்சரான தருமபுரி கே.பி.முனுசாமி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அத்துடன் கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேலுமணி ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்தது போல அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து கே.பி.முனுசாமி நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பொறுப்பில் இடைப்பாடி கே.பழனிச்சாமி நியமிக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்குப் பின்னர் நேற்று மாலை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்த பதவியேற்பு விழாவிலும் கூட கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டது பற்றிய கவலை இல்லாமல் முதல் வரிசையில் கே.பி.முனுசாமி கம்பீரமாகத்தான் அமர்ந்திருந்தார்.
அந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சி முடிந்து சிறிது நேரத்திலேயே கே.பி.முனுசாமியும் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
கே.பி. முனுசாமி கவனித்து வந்த தொழிலாளர் நலத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.