அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன் ? வரும் 12-ல் த.வா.க. பொதுக்குழு
சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதிகள் கூட ஒதுக்கப்படாத நிலையில் பண்ருட்டி வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வாழ்வுரிமை கட்சி, ஈழத் தமிழர் உரிமை பிரச்சனைகளில் ஆளும் அதிமுகவை நாம் தொடர்ந்து ஆதரித்து வந்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிரமாக பாடுபட்டோம்.
தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் தமிழகத்தில் 5 தொகுதிகள், புதுவையில் 1 தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் நாம் கேட்ட எண்ணிக்கையிலும் தொகுதிகளை தர அதிமுக முன்வரவில்லை;
அதேபோல் நாம் சுட்டிக்காட்டிய தொகுதிகளையும் நமக்கு அதிமுக ஒதுக்க முன்வரவில்லை. ஆகையால் அதிமுகவுடனான தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இது குறித்து விவாதித்து மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக வரும் 12-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 10.00 மணிக்கு நெய்வேலி கட்சி அலுவலகம், மாவீரன் வினோத் நினைவரங்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர பொதுக்குழு கூடுகிறது.
இந்த அவசர பொதுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகையால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அவசரப் பொதுக்குழுவில் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன்.
இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் தவறாமல் அவசர பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.