மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும்.. தமிழிசை சவுந்திரராஜன் உறுதி
சென்னை: மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்காக நிலம், மின்சாரம், 4 வழிச்சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மேற்கண்ட தகவல் உறுதியாகியுள்ளது. எனினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 30, 2018
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60 ஆண்டுகளில் வந்தது 9 இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.