ஜெ. படத்தை சட்டசபையில் திறக்கலாம்... தப்பு கிடையாது.. தமிழிசை, விஜயதாரணி
ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்து வைக்கலாம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியும் தெரிவித்தனர்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைக்கலாம் என்றும் அதில் தவறு ஒன்றும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியும் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் புகைப்படத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன நிலையில், அவரது படத்தை நாளை திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு திடீரென முடிவெடுத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் சபாநாயர் தனபால் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தவறு இல்லை
ஆனால் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைக்கலாம். அவர் மீது குற்றப் பின்னணி இருந்தாலும் மாநிலத்தை ஆண்ட முதல்வர் என்ற முறையில் படத்தை திறந்து வைக்கலாம், அதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ
காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியான திமுக, ஜெயலலிதாவின் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியும், ஜெயலலிதா படத்தை திறந்து வைக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் உருவ படம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது தவறில்லை. எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவருக்கு மணிமண்டபம் கட்டுவதும் தவறில்லை.
கடினமான காரியம்
இன்றைய கால கட்டத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அரசியலில் நீடிப்பது கடினமான காரியமாகும். இதில் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. ஒரு பெண் என்ற முறையில் அவர் கடினமான அரசியல் பாதையை கடந்து வந்தவர். பல்வேறு இன்னல்கள் வழக்குகள் இடையூறுகள் அவருக்கு வந்த போதிலும் அதை எதிர்கொண்டு அரசியலில் நீடித்தார். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் தலைவர்.
ஊழலில் சிக்கியது அவர் துரதிருஷ்டம்
எம்.எல்.ஏ.வாக எதிர்க்கட்சி தலைவராக முதல்வராக இருந்தவர் அவருக்கு மரியாதை கொடுப்பது தவறில்லை. மற்ற கட்சிகள் அவரை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறலாம். ஆனால் கீழ் கோர்ட்டில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வுக்கு தன்னை ஆட்படுத்தி கொள்ள அவர் உயிருடன் இல்லை. மரணம் மூலம் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. ஏதோ துரதிருஷ்டம் அவர் ஊழலில் சிக்கிக் கொண்டார் என்றார் விஜயதாரணி.