அரசியல் தலைவர்களின் அடுத்தடுத்த அப்பல்லோ விசிட்.. பின்னணியில் பரபரப்பு காரணம்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்ததாக உள்ளே சென்று திரும்பிய, ஆளுநர் முதல் எந்த ஒரு பிரமுகர்களும் தெரிவிக்கவில்லை.
ஆளுநரே போய் பார்த்த பிறகும், வதந்திகள் என்னவோ றெக்கை கட்டி பறந்தபடிதான் இருந்தன. அதிமுக கட்சியினரும், அப்பல்லோ மருத்துவமனையும், முதல்வர் நலமாக இருக்கிறார் என எத்தனை முறை சொல்லிப் பார்த்தும் வதந்தி பரப்பும் விஷமிகள் அடங்குவதாக இல்லை.
வதந்திகள் உச்சம் பெறும்போதெல்லாம், அறிக்கை அளித்து அப்பல்லோ நிர்வாகிகளின் கரங்கள் சோர்ந்து போனதுதான் மிச்சம். அப்போதுதான், களமிறங்கியது மாநில உளவுத்துறை.
திருமாவளவன்
உளவுத்துறை முதலில் களமிறக்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனைத்தான். அநேகமாக பாமக தவிர்த்து எல்லா கட்சியினர் மத்தியிலும் திருமாவளவனுக்கு நல்ல மதிப்பு இருப்பது உளவுத்துறை அறியாதது கிடையாது. எனவே அவர் அப்பல்லோ சென்று பேட்டியளித்தாலாவது வதந்திகள் தணியும் என்பதே, உளவுத்துறை கணிப்பு. இதற்காகவே அவரை அப்பல்லோ வர அப்பாயின்மென்ட் கொடுத்துள்ளது உளவுத்துறை.
பின்னணியில் உளவுத்துறை
அதிமுக எம்எல்ஏக்களே அப்பல்லோவின் வெளியே நடமாடிக்கொண்டிருக்கும்போது, மக்கள் நல கூட்டணியை சேர்ந்த திருமாவளவனுக்கு உள்ளே செல்ல எப்படி வாய்ப்பு கிடைத்தது என்ற கேள்விக்கான விடை உளவுத்துறைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தோர். ஆனால் அவர் அப்பல்லோ வாசலில் அளித்த பேட்டியில், முதல்வரை தான் பார்க்கவில்லை என்றும், அதிமுக 'தலைவர்கள்', முதல்வர் நலமாக இருப்பதாக தன்னிடம் கூறியதாகவும் பேட்டியளித்தார்.
சமூக ஊடகங்களில் கேள்வி
திருமாவளவன் பேட்டி, சமூக ஊடகவாசிகளின் கேலிக்குதான் ஆளானது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கெடுபிடி இல்லை என்று யாரோ சொல்லி கொடுத்ததை போல பேட்டியளித்த திருமாவளவன், எதற்காக கெடுபிடி இல்லாத இடத்தில் கூட முதல்வரை பார்க்கவில்லை என கேள்விகள் எழுந்தன. அதிமுகவில் ஜெயலலிதாவை தவிர்த்து வேறு யார் தலைவர் என்றும் கேள்விகள் எழுந்தன.
அடுத்தடுத்து தலைவர்கள்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என பார்த்தால் இப்படி திருமாவை கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்களே என நினைத்த உளவுத்துறை, அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் சீமான் என வரிசையாக அனைவருக்கும் வரவேற்பு கொடுத்து அப்பல்லோ வரை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களும், ஒரே மாதிரி பேட்டியளித்துவிட்டு இடத்தை காலி செய்துவிட்டனர்.
குழப்பி வருகிறார்கள்
யாரேனும் ஒருவராவது முதல்வரின் உடல்நிலை பற்றிய செய்திகளை முழுமையாகத் தெரிவிப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், "பார்த்தவரைப் பார்த்தோம். சொன்னதைக் கேட்டோம்" என்ற ரீதியில் தமிழக அரசியல் தலைவர்கள் அப்பல்லோ வாசலில் பேட்டியளிப்பது குழப்பத்தைத்தான் உண்டாக்குகிறது.
பின்னணியில் அதிகாரி
சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களுடன் நல்லுறவில் இருந்த உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் இப்போதும் அதேபோன்ற நட்போடு உள்ளாராம். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியின் நிர்வாகிக்கு உறவினரான இந்த அதிகாரி, தமிழக முதல்வரின் உடல்நலன் குறித்த நல்ல செய்தியை அ.தி.மு.கவைத் தவிர்த்து பிற கட்சிகள் மூலம் சொல்ல வைக்க வேண்டும் எனத் தீவிரமாக செயல்படுகிறாராம். இதுதான் இந்த தலைவர்கள் விசிட்டின் பின்னணி என்கிறார்கள்.